திருப்பூர், ஜூன் 25:தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் சார்பில் மாநிலம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடைபெறும் என அறிவித்திருந்தனர். அதன்படி திருப்பூரில் சம்மேளனத்தின் மண்டல தலைவர் கந்தசாமி தலைமையில் 24 மணி நேர உண்ணாவிரத போராட்டம் துவங்கியது. இப்போரட்டத்தை சிஐடியு மாநில துணை பொதுச்செயலாளர் கண்ணன் துவக்கி வைத்தார். சம்மேளத்தின் மாவட்ட துணை செயலாளர் மனோகரன் வரவேற்றார்.
மண்டல பொதுச்செயலாளர் செல்லதுரை,பொருளாளர் சுப்பிரமணி, துணை பொதுச்செயலாளர்கள் விஸ்வநாதன், தேவநாதன், கொங்குராஜ் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர். இதில், போக்குவரத்துக் கழகங்களை பாதுகாக்க வரவுக்கும் செலவுக்குமான வித்தியாச தொகைக்கான நிதியினை பட்ஜெட்டில் ஒதுக்கிட வேண்டும்.ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக பேசி முடித்திட வேண்டும்.2022 டிசம்பர் முதல் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்.
2003க்கு பின் பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு மற்றும் ஒப்பந்தப்படி ஓய்வூதிய முறைப்படுத்தி வழங்க வேண்டும்.காலி பணியிடங்களில் நிரந்தரமான முறையில் தொழிலாளர்களை நியமனம் செய்ய வேண்டும்.இறந்து போன தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கிட வேண்டும். ஓய்வூதியர்களுக்கு இதர துறை ஊழியர்களைப் போல் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.