Sunday, July 7, 2024
Home » கோரிக்கைகளை நிச்சயமாக நிறைவேற்றி தருவோம் தமிழக அரசு ஊழியர்கள் தான் அரசாங்கம்: அரசு ஊழியர் சங்க மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

கோரிக்கைகளை நிச்சயமாக நிறைவேற்றி தருவோம் தமிழக அரசு ஊழியர்கள் தான் அரசாங்கம்: அரசு ஊழியர் சங்க மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

by kannappan

சென்னை: அரசு ஊழியர்கள் தான் அரசாங்கம் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14ம் மாநில மாநாடு சென்னையில் நேற்று நடைபெற்றது. மாநாட்டில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.சுதர்சனம், கே.பி.சங்கர், சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் செல்வம், பொருளாளர் பாஸ்கரன், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் மாநில தலைவர் கு.தியாகராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர். மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: அரசு ஊழியர்கள்தான் அரசாங்கம். அரசு ஊழியர்கள் இல்லை என்றால் அரசாங்கம் இல்லை என்பதைச் சொல்வதற்காகத்தான் நான் வந்திருக்கிறேன். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களது முன்னேற்றத்துக்காக ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்திக் காட்டியிருக்கிறோம் என்பதை நானும் மறக்கவில்லை, நீங்களும் மறந்திருக்க மாட்டீர்கள். கடந்த மே மாதம் ஆட்சிக்கு வந்தோம். ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள்தான் ஆகிறது. அதற்குள் ஏராளமான திட்டங்கள் அரசு ஊழியர்களுக்குச் செய்து தரப்பட்டுள்ளன. இந்த அரசுக்கு கடும் நெருக்கடியான நிதி சூழல் இருப்பினும் அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலனை கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்ட நாளுக்கு மூன்று மாத காலம் முன்னதாகவே அதாவது 1.1.2022 முதல் அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்படும் என்பதை அறிவித்த ஆட்சி தான் இந்த ஆட்சி. இதன் மூலம் 16 லட்சம் அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெற்றுள்ளார்கள். போராட்டத்தால் பாதித்தவர்களின் கோரிக்கையை பரிவுடன் பரிசீலித்து பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தக் காலம் மற்றும் தற்காலிக பணிநீக்க காலம் ஆகியவற்றைப் பணிக்காலமாக முறைப்படுத்திய ஆட்சிதான் இந்த ஆட்சி. கருணை அடிப்படையிலான நியமனங்கள் குறித்து தற்போது நடைமுறையில் உள்ள தெளிவின்மையை சரிசெய்யும் வகையில் உரிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடத் தயாராகி வரும் ஆட்சிதான் திமுக ஆட்சி. வேலைநிறுத்தப் போராட்டத்தின்போது பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் நிச்சயமாக உறுதியாக கைவிடப்படும். அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ள காரணத்தால், ஆசிரியர் மாணவர்கள் விகிதாச்சார தேவைக்கேற்ப ஆசிரியர் பணி நியமனம் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்த ஆட்சிதான் இந்த ஆட்சி. நிதிநிலைமையைச் சரி செய்தாக வேண்டும். 5 லட்சம் கோடிக் கடன்களை அடைத்தாக வேண்டும். தமிழ்நாட்டின் நிதி நிலைமை விரைவில் சீராகும் என்ற நம்பிக்கை எனக்கு நிச்சயமாக, உறுதியாக  இருக்கிறது. அப்போது உங்களது அனைத்துக் கோரிக்கைகளையும் நீங்கள் கேட்காமலேயே, இது போன்ற மாநாடுகளையெல்லாம் போட்டு என்னை அழைத்து வந்து இந்த உறுதியை கேட்காமேலேயே அந்த கோரிக்கையை நிச்சயமாக இந்த அரசு நிறைவேற்றித் தரும்.  ஜி.எஸ்.டி. முதல் வெள்ள நிவாரண நிதி வரைக்கும் நமக்குத் தரவேண்டிய நிதிகளே முழுமையாகத் தரப்படுவது இல்லை. அளவு அறிந்து இந்த அரசு செயல்படுகிறது. ஈட்டுதல் அதிகமானதும் கொடுத்தல் அதிகம் ஆகும். நிச்சயம் அதிகரித்து வழங்கப்படும். மக்களுக்குக் கொடுப்பதற்காகத்தான் இந்த அரசு இருக்கிறது. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். …

You may also like

Leave a Comment

seventeen − fifteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi