சென்னை: திருக்கோயில் நிகழ்ச்சிகள் மற்றும் திருவிழாக்களில் இசைப்பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறிநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி முக்கிய திருவிழாக்கள் மற்றும் சிவாலயங்களில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் கலை பண்பாட்டு துறையில் பதிவு செய்த கலைஞர்கள், இசைக் கல்லூரி மற்றும் இசை பள்ளிகளில் பயின்ற கலைஞர்களை பயன்படுத்திட அனைத்து அலுவலர்களுக்கும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அறிவுரை வழங்கியுள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திலுள்ள கலைஞர்கள் மற்றும் கலை குழுவினரின் விவரம் பெறுவதற்கு ஏதுவாக கலை பண்பாட்டு துறையின் மண்டல உதவி இயக்குநர்கள், இசைப்பள்ளி முதல்வர்கள், மாவட்ட அரசு இசைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களிடம் கலைஞர்களின் விவரம் பெற்று அவர்களை திருக்கோயில்களில் கலைநிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தவும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், தமிழர் பாரம்பரிய கலைகளை பாதுகாக்கவும், அக்கலைகளை இன்றைய இளைய சமுதாயத்தினர் கொண்டு சேர்க்கவும் இத்தகைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து திருக்கோயில்களில் நடைபெறும் திருக்கோயில் நிகழ்ச்சிகள் மற்றும் முக்கிய திருவிழாக்களில் கலை பண்பாடு மற்றும் இசைப்பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது….