செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகரில் ராமபாளையம் பகுதியில் உள்ள ஏடிஎம் மிஷின் மையத்தின் கண்ணாடி கதவை உடைத்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆடி மாதம் தொடங்கிய நிலையில் பல இடங்களில் கோயில் திருவிழா நடைபெறுகிறது. அதன்படி, செங்கல்பட்டு ராமபாளையம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலிலும் கடந்த சில நாட்களாக திருவிழா நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் அம்மன் வீதி உலா வந்தபோது சில மர்ம நபர்கள் ராமபாளையம் பகுதியில் உள்ள ஐசிஐசிஐ வங்கியின் ஏடிஎம் மிஷின் மைய கண்ணாடியை பீர் பாட்டிலால் அடித்து நொறுக்கிவிட்டுச் சென்றனர். இதனையடுத்து ஏடிஎம் மிஷினில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கோயில் திருவிழாவின்போது மர்ம நபர்கள் ஏடிஎம் மிஷின் மைய கண்ணாடியை உடைத்துள்ளனரா அல்லது பணம் திருடும் நோக்கத்தில் உடைத்தனரா என்ற கோணங்களில் செங்கல்பட்டு நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.