கோயிலில் பழமையான கட்டடம் இடித்து அகற்றம்

 

பல்லடம், ஜூலை 2: பல்லடம் அருளானந்த ஈஸ்வரர் கோவிலில் இடிந்து விழும் நிலையில் இருந்த பழமையான கட்டடம் இடித்து அகற்றப்பட்டது. பல்லடம் நகராட்சி 9வது வார்டு பட்டேல் வீதியில் உள்ள பழமை வாய்ந்த அருளானந்த ஈஸ்வரர் கோவிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை கடந்த மே மாதம் 5ம் தேதி இந்து அறநிலைத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் பார்வையிட்டார். அப்போது அருளானந்தசித்தர் ஜீவசமாதி மற்றும் ஈஸ்வரர் ஆகியோரை வழிபட்டார்.

தொடர்ந்து அப்பகுதியில் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருந்த கோவில் பஜனை மடத்து கட்டடத்தை இடித்து அகற்ற வேண்டும் என்று கோவில் திருப்பணிக்குழுவினர் மற்றும் பக்தர்கள் அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். அக்கட்டடத்தை அவர் பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து தற்போது இடிந்து விழும் நிலையில் இருந்த அக்கட்டடம் முழுமையாக இடித்து அகற்றப்பட்டது.

இப்பணியை இந்து சமய அறநிலைய துறை மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கீர்த்தி சுப்பிரமணியம், மாவட்ட அறங்காவலர் ஆடிட்டர் முத்துராமன், இந்து சமய அறநிலைய துறை துணை ஆணையர் ஹர்சினி, செயல் அலுவலர் ராமசாமி, ஆய்வாளர் கண்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை, கோவில் திருப்பணி குழுவினர், பக்தர்கள் பார்வையிட்டனர்.

Related posts

புதுக்கோட்டை மாவட்டத்தில் கண்மாய், குளங்களில் வண்டல், களிமண் எடுக்கலாம்

புதுகை மாவட்ட வள பயிற்றுநர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்

தொழில்முனைவோர் ஆலோசனை கூட்டம்