ஸ்ரீவைகுண்டம், ஏப்.22: ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள அணியாபரநல்லூரைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் தங்கராஜ்(50). இவர் தெய்வச்செயல்புரம் டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார். ஸ்ரீவைகுண்டம் அருகே புதுப்பட்டி பகுதியில் வந்த போது தூத்துக்குடி மகிழ்ச்சிபுரத்தைச் சேர்ந்த நாகலிங்கம் மகன் மணிகண்டன்(23), தூத்துக்குடி கதிர்வேல் நகரை சேர்ந்த முருகேசன் மகன் மாரிமுத்து (24), தூத்துக்குடி மில்லர்புரம் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த சண்முகம் மகன் கொம்பையா (27) ஆகியோர் தங்கராஜை வழிமறித்து தாக்கி அவர் வைத்திருந்த ரூ.1,90,070 பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இவர்களை போலீசார் தேடிவந்த நிலையில் கடந்த 13ம்தேதி சிக்கிய மணிகண்டன், மாரிமுத்து ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் வைகுண்டம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், கொம்பையா மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க எஸ்பி பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், கொம்பையாவை கைது செய்ய உத்தரவிட்டார். அந்த உத்தரவு நகலை வைகுண்டம் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் பாளை மத்திய சிறையில் வழங்கினார்.