கொள்ளிடம் பகுதியில் 500 ஏக்கரில் சாகுபடி: மா பயிர்களுக்கு நீர்பாய்ச்சுதல், உரமிடுதல் வேளாண்துறை தொழில்நுட்ப ஆலோசனை

கொள்ளிடம், ஜூலை 4: கொள்ளிடம் சுமார் 500 ஏக்கரில் மா பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மா பயிர்களுக்கு நீர்பாய்ச்சுதல், உரமிடுதல் குறித்து வேளாண் அதிகாரிகள் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கி உள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் திருமயிலாடி, கண்ணாங்குளம், சீயாளம், கூத்தியம்பேட்டை, தாண்டவன்குளம், மாதிரவேளூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500க்கு மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் மா பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மா பயிர் சாகுபடி ஆரம்ப நிலையில் சற்று சிரமத்துடன் பயிர் செய்தாலும், அது காய் காய்த்து பலன் தரும்போது கணிசமாக லாபத்தை விவசாயிகளுக்கு அளித்து வருகிறது.

இந்நிலையில் கொள்ளிடம் வேளாண் அதிகாரிகள் மா பயிர் சாகுபடிக்கு அரசின் மானிய உதவி மற்றும் அனைத்து அரசின் உதவிகளையும் வழங்கி ஆலோசனையும் வழங்கி வருகின்றனர். இதுகுறித்து தோட்டக்கலைதுறை அதிகாரிகள் கூறுகையில், நீலம், பெங்களூரா, நடுச்சாலை, ருமானி, மல்கோவா, பையூர்-1, அல்போன்சா, சிந்து மற்றும் வீரிய ஒட்டு ரகங்களான பெரியகுளம், மல்லிகா, அமரப்பாலி, மஞ்சிரா, அர்கா, அருணா, அர்காபு னீத், அர்கா நீலகிரன், சிந்து ஆகியவைகளாகும்.

செம்மண் நிலம் மா பயிர் செய்வதற்கு ஏற்றதாகும். மண்ணின் கார அமிலத் தன்மை 6.5 முதல் 8 வரை இருக்க வேண்டும். மா நடுவதற்கு ஜூலை முதல் டிசம்பர் வரை ஏற்ற பருவமாகும். நிலத்தை நன்கு உழுது பின்பு 1 மீட்டர் நீளம், 1 மீட்டர் அகலம், 1 மீட்டர் ஆழம் உள்ள குழிகளை செடிகள் நடுவதற்கு 15 நாள்களுக்கு முன்வெட்டி, பின்னர் குழி ஒன்றுக்கு10 கிலோ தொழுஉரம், 100 கிராம் லின்டேன் உடன் மேல் மண் நன்கு கலக்கப்பட்டு குழியின் முக்கால் பாகம் வரை மூட வேண்டும். ஒட்டுச்செடிகளை குழிகளின் மத்தியில் நட வேண்டும்.

செடிக்குச்செடி 6 முதல் 10 மீட்டர் வரை இடைவெளிவிட வேண்டும். அடர்நடவு முறையினை அல்போன்சா, பங்கனப்பள்ளி, மல்லிகா போன்ற ரகங்களுக்கு பயன்ப டுத்தலாம். செடிகள், நன்றாக வள ரும் வரை அடிக்கடி நீர்ப் பாய்ச்ச வேண்டும்.மேலும் பயிறு வகைகள் நிலக்கடலை மற்றும் காய்கறிகள் போன்றவற்றை ஊடு பயிராகப் பயிரிடலாம். மரத்துக்கு ஒரு கிலோ உரமிட வேண் டும். உரங்களை செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் செடிகளின் வயதிற்கேற்ப செடிகளின் அடிப்பாகத்திலிருந்து 45 முதல் 90 செ.மீ தூரத்தில் இட்டு பின் அவற்றை மூடி நீர்ப் பாய்ச்ச வேண்டும். ஒரு ஹெக்டருக்கு முதல் வருடத்துக்கு தழை, மணி, சாம்பல் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களை வேளாண் அலுவலர்களின் ஆலோசனையின்பேரில் இட வேண்டும்.

ஒரு மரத்துக்கு முதல் வருடத்தில் ஒரு கிலோ யூரியா வீதமும், வருடந்தோறும் காம்ப்ளக்ஸ்12 கிலோ, யூரியா 2 கிலோ வீதமும் இட வேண்டும். 6 வருடங்களுக் குப் பிறகு தேவையான அளவு காம்ப்ளக்ஸ் மற்றும் பொட்டாஷ் உரங்களை இடவேண்டும். பின்னர் ஒரு வருடத்திற்கு ஒரு முறை ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நெருக்கமாக உள்ள கிளைகளை வெட்டிவிட்டு ஆரோக்கியமான கிளைகளை மட்டும் வளர விட வேண்டும். பிஞ்சுகள் உதிர்வது தடுக்கப்பட்டு காய்ப்பிடிப்பு அதிகரிக்க என்ஏஏ என்ற வளர்ச்சி ஊக்கி ஒரு மில்லி மருந்தை 50 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். பிப்ரவரி மாதத்தில் பூ பூக்காத மரங்களுக்கு 0.5 சதவீதம் யூரியா கரைசல் அல்லது பொட்டாசியம் நைட்ரேட் கரைசல் தெளிக்க வேண்டும். பூச்சி தாக்குதலை கட் டுப்படுத்த ஹெக்டருக்கு பாசலோன் 35 இசி 1.5 மிலி மருந்தை நீரில் கலந்து கிளைகள் தண்டுகள் மரத்தின் இலைகள் ஆகியவற்றில் நன்கு படும்படி தெளிக்க வேண்டும். அல்லது கார்பரில் 50 சதவீதம் நனையும் தூள் 2 கிராமுடன் 2 கிராம் நனையும் கந்தகம் ஆகியவற்றை ஒரு லிட்டர் நீரில் கலந்து மரம் பூக்க ஆரம்பிக்கும் காலத்தில் 15 நாள்கள் இடைவெளியில் இரண்டுமுறை தெளிக்க வேண்டும்.

அசுவினி, செதில்பூச்சி, தண்டு துளைப்பான், பழம் ஈ, சாம்பல் நோய், இலைப்புள்ளி, கரும்பூஞ் சாண் நோய் போன்றவற்றுக்கும் அதிகாரிகள் பரிந்துரைகளின்படி மருந்துகள் தெளிக்க வேண்டும். மார்ச் முதல் ஜூன் மாதம் வரை அறுவடை செய்யலாம். எனவே விவசாயிகள் மா பயிரிட்டு அதிக லாபம் பெறலாம்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை