கொள்ளிடம் : கொள்ளிடம் அருகே உள்ள கொடக்காரமூலை கிராமத்தில் முறிந்து விழும் நிலையில் உள்ள ஆபத்தான மின் கம்பத்தை அகற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையபாளையம் ஊராட்சியை சேர்ந்த கொடக்காரமூலை கிராமம் முருகன் கோவில் தெருவில் உள்ள தெரு மின்விளக்கு மின்கம்பம் ஒன்றின் நுனிப்பகுதி முறிந்த நிலையில் எந்த நேரத்திலும் விழும் அபாய நிலையில் உள்ளது. கடந்த 2 வருட காலமாக ஆபத்தான நிலையில் இருந்து வரும் இந்த மின்கம்பத்தால் தெருவில் உள்ள மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். எந்த நேரமும் மின்னோட்டம் இருந்து கொண்டே இருக்கும் இந்த மின் கம்பத்தில் உள்ள மின் கம்பிகள் திடீரென அதிக காற்று வீசும்போது மின்கம்பி யுடன் முறிந்து விழும் நிலை ஏற்பட்டால் உயிர் சேதம் ஏற்படும் ஆபத்து உள்ளது. தெருவில் காலை மற்றும் மாலை நேரங்களில் ஆண் மற்றும் பெண்கள்,இளைஞர்கள், சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் அப்பகுதியில் நடமாடும் இடமாக இருந்து வருகிறது. ஆனால் ஆபத்தான நிலையில் இருந்து வருகிறது. மரக்கிளைகள் இந்த மின் கம்பத்தை சூழ்ந்துள்ளன. இதனால் மழை பெய்யும் போது மரக்கிளைகளில் ஈரம் இருக்கும்போது மின்சாரம் பாய்ந்து அதுவும் மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் நிலை உள்ளது.இதுகுறித்து கிராம மக்கள் சார்பில் கடந்த இரண்டு வருடங்களாக பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி ஆபத்தான நிலையில் இருந்து வரும் இந்த ஆபத்தான முறிந்து விழும் நிலையில் உள்ள மின்கம்பத்தை உடனே அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது….