கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு; திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்

சென்னை: கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடந்து வரும் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் சாலைப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, குடிநீர் வசதி மற்றும் கழிவுநீர் அகற்றும் நிலையம் அமைக்கும் பணிகளை துவக்கி வைத்தார். கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜவஹர் சாலையில் அமைந்துள்ள கவுதமபுரம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு குடிநீர் வசதி செய்து தரும் வகையில், சென்னை பெருநகர் குடிநீர் வடிகால் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் வாயிலாக வியாசர்பாடி நீர்நிலை பகிர்மான நிலையத்திலிருந்து ஜவஹர் சாலை வரை 2.8 கி.மீ. தூரத்திற்கு 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் பிரதான குழாய்கள் பதிக்கும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.  தொடர்ந்து, ஜெகநாதன் சாலை மற்றும் அசோக் அவென்யூ பகுதிகளில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி நிற்கும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளையும் ஆய்வு செய்தார். பின்னர், ஜி.கே.எம். காலனி, ஜம்புலிங்கம் பிரதான சாலையில் சென்னை பெருநகர் குடிநீர் வடிகால் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் 40 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கழிவுநீர் அகற்றும் நிலையம் அமைக்கும் பணியை மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். மேலும், ரங்கதாஸ் காலனி மற்றும் நேதாஜி காலனி மெயின் ரோட்டில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணியை பார்வையிட்டார். இதையடுத்து, அஞ்சுகம் நகர் 12வது தெருவில் தார்சாலை அமைக்கும் பணியையும் பார்வையிட்டு, அனைத்து பணிகளையும் விரைவாகவும், தரமாகவும், குறித்த நேரத்திலும் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.  இந்நிகழ்வின்போது, அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி,  சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னை பெருநகர் குடிநீர் வடிகால் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் சி.விஜயராஜ் குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்