புதுடெல்லி: ‘கொரோனா 2வது அலையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நாடு முழுவதும் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை’ என மாநிலங்களவையில் ஒன்றிய அரசு அளித்துள்ள பதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா 2வது அலையில் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி படுக்கைக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. உரிய நேரத்தில் மருத்துவ ஆக்சிஜன் கிடைக்காமல் ஒவ்வொரு நாள் இரவிலும் கொத்து கொத்தாக மக்கள் பலர் இறந்தனர். ஆக்சிஜன் ஆலைகள் முன்பாக காலி சிலிண்டர்களை நிரப்ப, உறவினர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்துக் கிடந்தனர். ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க, உலகின் பல நாடுகளும் ராட்சத ஆக்சிஜன் சிலிண்டர்களை விமானம், கப்பல் மூலமாக அனுப்பி வைத்தன.ஒன்றிய அரசு சரியான நேரத்தில் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்காமல் விட்டதே, பெரும் உயிரிழப்புகளுக்கு காரணமாக அமைந்தது என உள்ளூர் முதல் சர்வதேச ஊடகங்கள் வரை குற்றம்சாட்டின. இப்படிப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் கொரோனா தொடர்பான நேற்றைய விவாதத்தில் இந்த விவகாரம் கிளப்பப்பட்டது. திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாந்தனு சென் பேசுகையில், ‘‘ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியாமல் மக்கள் சாலைகளில் மடிந்தனர். இது 21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய வெட்கக் கேடான விஷயம்,’’ என்றார். பல எம்பிக்களும் ஒன்றிய அரசை குற்றம்சாட்டினர்.இதற்கு சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், ‘சுகாதாரம் மாநில அரசுகள் வரம்புக்கு உட்பட்டது. கொரோனா பாதிப்பு மற்றும் பலி குறித்த புள்ளி விவரங்களை மாநில அரசுகள் ஒன்றிய அரசுக்கு தரும். அவை அனைத்தையும் சேகரித்து நாடு முழுவதும் மொத்தமாக ஏற்பட்ட பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையை ஒன்றிய அரசு அறிவிக்கும். அதன்படி, மாநில அரசுகள் அளித்த தகவலின்படி, நாட்டில் 2வது அலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒரு உயிரிழப்பு கூட நேரவில்லை. முதல் அலையை காட்டிலும் (3095 மெட்ரிக் டன்) 2வது அலையில் (9000 மெட்ரிக் டன்) எதிர்பாராத விதமாக அதிகப்படியான ஆக்சிஜன் தேவை ஏற்பட்டது. அதற்கு தேவையான வசதிகளை மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு செய்து கொடுத்தது,’ என கூறினார்.இந்த பதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தடுப்பூசி தட்டுப்பாடு; திமுக எம்பி குற்றச்சாட்டுமாநிலங்களவை பிற்பகல் 1 மணிக்கு பிறகு தொடங்கியதும், கொரோனா தொடர்பான விவாதம் நடந்தது. இதில், திமுக எம்பி திருச்சி சிவா பேசுகையில், ‘தடுப்பூசி இல்லாமல் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் முகாம் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது,’ என்றார். அவர் கூறுகையில், ‘‘கொரோனாவை காரணம் காட்டி எம்பிக்கள் தொகுதி வளர்ச்சி நிதியை ஒன்றிய அரசு நிறுத்தி உள்ளது. அந்த நிதி கொடுத்திருந்தால் 800 எம்பி.க்கள் பல மருத்துவமனைகளை தத்தெடுத்து, ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுத்திருப்பார்கள். செங்கல்பட்டில் 700 கோடி செலவில் கட்டப்பட்ட தடுப்பூசி உற்பத்தி செய்யும் திறன் கொண்ட ஆலை பயன்படுத்தப்படாமல் உள்ளது. இதை தனியாருடன் இணைந்து செயல்பாட்டிற்கு கொண்டு வர தமிழக அரசு தயாராக உள்ளது. எனவே, செங்கல்பட்டு ஆலையை தமிழக அரசுக்கு ஒன்றிய அரசு குத்தகைக்கு தர வேண்டும்,’’ என்றார். இதே போல், தமிழகத்தை சேர்ந்த அனைத்து எம்பிக்களும் தமிழகத்தில் நிலவும் தடுப்பூசி பற்றாக்குறையை சுட்டிக்காட்டி ஒட்டுமொத்தமாக ஒன்றிய அரசுக்கு நெருக்கடி தந்தனர்….
கொரோனா 2வது அலையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் ஒருவர் கூட இறக்கவில்லை: ஒன்றிய அரசின் பதிலால் அதிர்ச்சி
previous post