சென்னை: கொரோனா 2வது அலையால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் இருந்து மட்டும் கடந்த இரண்டு நாட்களில் 4,575 அரசு பஸ்களில் 2,05,875 பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா 2வது அலையின் பாதிப்பு மிக அதிகமாக இருக்கிறது. இதைக்கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக நேற்று முதல் வரும் 24ம் தேதி வரையிலான காலத்திற்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, அமலுக்கு வந்துள்ளது. இதில் அத்தியாவசிய தேவைகளான பால் விநியோகம், பத்திரிகை விநியோகம், மருத்துவசேவை, விரைவு தபால் சேவை, உணவு விநியோகம் போன்றவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காய்கறி, மளிகை போன்ற கடைகள் காலை 6 மணி முதல் 12 வரை மட்டுமே செயல்படும். பஸ் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆட்டோ, கார்கள் ஓடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நகரங்களில் வசிக்கும் மக்கள் கடந்த சனி, ஞாயிற்று கிழமைகளில் சொந்த ஊர்களுக்கு பயணித்தனர். இவர்களில் வசதிக்காக அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் சேர்த்து கூடுதலாக சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் முகக்கவசம் அணிந்து கொண்டு, அரசின் விதிமுறைகளை கடைபிடித்து ஏராளமானோர் பயணித்தனர். குறிப்பாக சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்ட 4,575 அரசு பஸ்களில், 2,05,875 பேர் பயணித்துள்ளனர். இவர்கள் அனைவரும் கொரேனா பரவலால் ஏற்பட்டுள்ள அச்சத்தின் காரணமாக சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதனால் சென்னையில் எப்போதும் பரபரப்பாக இயங்கும் முக்கிய சாலைகள் அனைத்தும் வாகன ஓசையின்றி அமைதியாக காணப்பட்டது. அத்தியாவசிய பணியில் ஈடுபடுவோர் மட்டுமே பயணித்தனர். * வெறிச்சோடிய கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட்தமிழகத்தில் உள்ள பெரிய பஸ் ஸ்டாண்ட் கோயம்பேடு. இங்கிருந்து தமிழகம், அண்டை மாநிலங்களுக்கு பஸ் இயக்கப்படுகிறது. மேலும் சென்னையின் பல்வேறு இடங்களுக்கும் பஸ்கள் செல்லும். மேலும் பயணிகளை அழைத்துச் செல்வதற்காகவும், இறக்கி விடுவதற்காகவும் நூற்றுக்கணக்கான ஆட்டோ, கால்டாக்சி போன்றவை வருவது வழக்கம். இதனால் சம்மந்தப்பட்ட பஸ் ஸ்டாண்ட் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினால் அரசு பஸ், ஆட்டோ, கால்டாக்சி போன்றவை இயங்கவில்லை. இதனால் கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் வெறிச்சோடி காணப்படுகிறது….