சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. எனவே, வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் நேற்று முதல் வரும் 24ம் தேதி வரை முழு ஊரடங்கை அரசு அறிவித்து அமலுக்கு வந்துள்ளது. இதில், விமான பயணிகளுக்கு விதிவிலக்கு அறிவித்துள்ளது. ஆனாலும் சென்னை விமான நிலையம் பயணிகள் இன்றி வெறிச்சோடியது. சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வழக்கமாக வெளிநாடுகளில் இருந்து வந்தே பாரத் மற்றும் சிறப்பு விமானங்கள் தினமும் 20க்கும் மேற்பட்ட விமானங்கள் வந்து கொண்டிருந்தன.நேற்று 3 வந்தே பாரத் விமானங்கள் உட்பட 10 விமானங்கள் மட்டுமே வருகின்றன. குறைவான பயணிகளே வருகின்றனர். இந்நிலையில் சென்னை உள்நாட்டு விமானத்தில் நேற்று 104 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதில் 50 விமானங்கள் சென்னையில் இருந்து புறப்படுபவை. 54 விமானங்கள் சென்னைக்கு வரும் விமானங்கள். பயணிகள் இல்லாததால் சில விமானங்கள் 2 அல்லது 3 விமானங்கள் இணைக்கப்பட்டு ஒரே விமானமாக சென்றது. முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது….