கொரோனா தொற்று பாதித்த நடிகை கரினா கபூருடன் விருந்தில் கலந்து கொண்டவர்கள் யார் யார்?

மும்பை: கொரோனா தொற்று பாதித்த நடிகை கரீனா கபூருடன் விருந்தில் கலந்து கொண்டவர்கள் யார் யார் என தீவிர விசாரணை நடக்கிறது. மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. அதனால் கொரோனா விதிமுறைகளை மீறி பொதுமக்கள் நடமாட தொடங்கியுள்ளனர். குறிப்பாக மதுபான விடுதிகள், பார்களில் கொரோனா தடுப்பு விதிகள் காற்றில் பறக்க விடப்படுகின்றன. அரசின் விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் பிரபல இந்தி நடிகைகள் கரீனா கபூர், அம்ரிதா அரோராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர், கடந்த ஒரு வாரத்தில் பல விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றது தெரியவந்தது. குறிப்பாக மும்பையில் உள்ள கிரான்ட் ஹயாத் ஓட்டல், இயக்குனர் கரன் ஜோகர் மற்றும் ரியா கபூர் ஆகியோரின் வீடுகளில் நடந்த விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். எனவே அவருடன் தொடர்பில் இருந்தவர்களின் பட்டியலை மாநகராட்சி தயார் செய்து, அவர்களுக்கு ஆர்டிபிசிஆர் சோதனை நடத்தி வருகிறது. இது குறித்து மாநகராட்சி கூடுதல் கமிஷனர் சுரேஷ் ககானி கூறுகையில், ‘‘தொற்று பரிசோதனை முடிவு வரும் வரை தனிமைப்படுத்தி கொள்ளுமாறு நடிகையுடன் தொடர்பில் இருந்தவர்களை உத்தரவிட்டு உள்ளோம். கரீனா கபூரின் கட்டிடமும் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. இதுவரை நடிகையுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 15 பேருக்கு பரிசோதனை செய்துள்ளோம். மற்றவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படும்” என்றார்.இதற்கிடையே மும்பை மேயர் கிஷோரி பெட்னேக்கர் கூறுகையில், ”கரீனாவுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கொரோனா பரவல் முடியாத நிலையில் அலட்சியமாக நடந்து கொள்வது சரியல்ல. கரீனா விருந்தில் கலந்து கொண்ட கிரான்ட் ஹயாத் ஓட்டலை தொடர்பு கொண்டுள்ளோம். அந்த விருந்தில் கலந்து கொண்டவர்களை கண்டறிந்து வருகிறோம். தொற்று பாதித்த 2 நடிகைகளின் டாக்டர்களையும் தொடர்பு கொண்டு பேசியுள்ளோம். பொதுமக்கள் அதிக முன்எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பிரபலமாக இருப்பவர்கள் ஏன் கொரோனாவுக்கு பயப்படுவதில்லை?. அரசு வழங்கி உள்ள தளர்வுகளை சிலர் மற்றும் ஓட்டல்கள் தங்களுக்கு சாதகமாக எடுத்து கொண்டது போல தெரிகிறது. தற்போது ஒமிக்ரான் அச்சுறுத்தல் உள்ளது. எனவே கொரோனா விதிகளை கடைபிடிக்குமாறு பொதுமக்களை கேட்டு கொள்கிறேன்’ என்றார்….

Related posts

ஹத்ராஸ் கூட்டநெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி அலகாபாத் ஐகோர்ட்டில் பொதுநல மனுத் தாக்கல்

சந்திரபாபு நாயுடு நிலத்தை அளந்து கொடுக்க லஞ்சம் பெற்ற சர்வேயர் சஸ்பெண்ட்

இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் பற்றி ஜனாதிபதி உரையில் எதுவும் இல்லாதது வேதனை தருகிறது: மணிப்பூர் எம்.பி. ஆதங்கம்