சென்னை: கொரோனாவால் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் குறைபாடுகள் மற்றும் இடையூறுகளை சரிசெய்யும் வகையில் பாடச்சுமையை குறைக்க தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் திட்டமிட்டுள்ளது. கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, ஆன்லைன் கல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நாடு முழுவதும் கல்வித்துறை பெரும் தாக்கத்திற்கு ஆளானது. மாணவர்களை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவர தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக பள்ளி மாணவர்களின் பாடச்சுமையை குறைக்க பாடப்புத்தகங்களின் உள்ளடக்கத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 2022- 23 கல்வி ஆண்டு தொடங்குவதற்கு முன்பாக பாடத்திட்டங்கள், பாட புத்தகங்களை அனைத்து நிலைகளிலும் பகுப்பாய்வு செய்ய நிபுணர் குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. முன்மொழியப்பட்ட மாற்றங்களுடன் கூடிய பாடப்புத்தகங்களை இன்னும் சில நாட்களில் மறு பதிப்பிற்காக அனுப்பவும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே தேசிய கல்வி கொள்கை அடிப்படையிலான பாடப்புத்தகங்கள், 2023-24 கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. …