ஊட்டி : ஊட்டியில் கடந்த ஒரு வார காலமாக மழை பெய்து வரும் நிலையில், ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. நேற்று தாவரவியல் பூங்கா உள்ளிட்ட அனைத்து சுற்றுலாதலங்களிலும் சுற்றுலா பயணிகள் குறைந்தே காணப்பட்டனர். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி ஓரிரு நாட்கள் பெய்யும். அதன்பின், நவம்பர் மாதம் பனிப்பொழிவு காணப்படும். இதனால், பகல் நேரங்களில் வெளிலும், இரவு நேரங்களில் பனிப் பொழிவும் காணப்படும். ஆனால், இம்முறை கடந்த ஜூன் மாதம் துவங்கி மழை இதுவரை விட்டபாடில்லை. தொடர்ந்து 6 மாதங்களுக்கு மேலாக மழை பெய்து வருகிறது. தற்போது வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தம் காரணமாக கடந்த ஒரு வாரகாலமாக நீலகிரி மாவட்டத்தில் மழை கொட்டி வருகிறது. குறிப்பாக, ஊட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் மழையின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால், பெரும்பாலான பகுதிகளில் மண் சரிவுகள் ஏற்பட்டு வருகிறது. தொடர்ந்து கன மழை பெய்தால், பெரிய அளவிலான நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் நீடிக்கிறது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதால், வெளி மாநிலங்களில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவதை தவிர்க்க வேண்டும் என மாநில பேரிடர் மேலாண்மை துறையும், மாவட்ட நிர்வாகமும் கேட்டுக் கொண்டது. இதனால், அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருவதை கடந்த ஒரு வாரமாக தவிர்த்துள்ளனர். இதனால், ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. கடந்த வாரங்களை காட்டிலும், தற்போது மிகவும் குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகள் மட்டுமே வருகின்றனர்.இதனால், தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா போன்ற சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் வெகுவாக குறைந்து காணப்படுகிறது. நேற்றும் ஊட்டியில் காலை முதலே மழை பெய்த நிலையில், சுற்றுலா பயணிகள் குடைகளை படித்தப்படியே வலம் வந்தனர். தொடர் மழையால் தாவரவியல் பூங்காவில் உள்ள புல் மைதானங்கள் சேறும் சகதியுமாக மாறியுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், மேலும், சுற்றுலா பயணிகள் வருகை குறைய வாய்ப்புள்ளது….