மேலூர், ஏப். 17: மதுரை கொட்டாம்பட்டி அருகே சொக்கம்பட்டியில் உள்ள சரியா கொண்டை கண்மாயில் நேற்று மீன் பிடி திருவிழா நடைபெற்றது. இதில் சுற்றுப்பகுதியை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட கிராமமக்கள் கலந்து கொண்டனர். கிராம முக்கியதஸ்ர்கள் வெள்ளை வீசியதும், ஒரே நேரத்தில் கிராமமக்கள் கண்மாய்க்குள் இறங்கி தாங்கள் கொண்டு வந்திருந்த வலை, கச்சா, ஊத்தாவால் உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு மீன்களை பிடித்தனர். கெளுத்தி, கெண்டை, கட்லா, ரோகு, விரால், அயிரை என பல வகை மீன்கள் பிடிபட்டது.
எதிர்பார்த்ததை விட அதிகளவு மக்கள் கூடியதால், பலருக்கும் மீன்கள் கிடைக்கவில்லை. அதிகளவு மீன்களை பிடித்த சிலர், மீன்கள் கிடைக்காத சிலருக்கு பகிர்ந்து கொடுத்தனர். பிடிபட்ட மீன்களை வீடுகளில் சமைத்து, இறைவனுக்கு படைத்து, உண்ணுவதை இப்பகுதி மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த மீன்பிடி திருவிழா மூலம் விவசாயம் செழித்து, மழை பெய்யும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாகும்.