கொடைக்கானல், நவ. 26: கொடைக்கானல் முக்கிய சுற்றுலா இடமாக இருந்து வருகிறது. இங்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் அதிகளவில் வருகை புரிந்து வருகின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் தங்களது சொந்த நான்கு சக்கர மற்றும் இரு சக்கர வாகனங்களில் வருகை தருகின்றனர். சில சுற்றுலா பயணிகள் பஸ்களில் வருகை புரிந்து நான்கு சக்கர வாகனங்களை வாடகைக்கு எடுத்தும் செல்கின்றனர்.
இந்நிலையில் சில தங்கும் விடுதிகளில் அனுமதியின்றி இருசக்கர வாகனம் வாடகைக்கு விடப்பட்டு வருவதாக தொடர் குற்றசாட்டு எழுந்தது. இந்நிலையில் நேற்று கொடைக்கானல் ஏரி சாலை பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியின்றி இருசக்கர வாகனம் வாடகைக்கு விடப்பட்டதாக புகார் எழுந்தது. இதுபற்றி தகவலறிந்ததும் கொடைக்கானல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வாடகைக்கு விடப்பட்ட 2 இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.