கோவை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் பிரபல மணல் சப்ளையர் மகனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். நீலகிரி மாவட்டம் கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக மேற்கு மண்டல போலீஸ் ஐஜி சுதாகர் தலைமையிலான போலீசார் மணல் சப்ளையர் ஓ.ஆறுமுகசாமியின் மகன் செந்தில்குமாரிடம் (48) நேற்று கோவையில் விசாரணை நடத்தினர். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது குவாரிகளில் மணல் எடுக்கும் ஒப்பந்தத்தை ஆறுமுகசாமி பெற்றிருந்தார். மணல் சாம்ராஜ அதிபர் என்ற பெயரில், ஆறுமுகசாமியின் சொத்துக்கள் பல மடங்கு பெருகியதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து அவர் மகன் பெயரில் பல்வேறு நிறுவனங்களை துவக்கினார். பின்னர் அறக்கட்டளை துவக்கி கல்வி, மருத்துவ உதவி வழங்கினர். மணல் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டதால் உதவிகள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் யாரும் எதிர்பாராத நிலையில் போலீசார் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை வளையத்திற்குள் ஆறுமுகசாமியின் மகன் செந்தில்குமாரை கொண்டு வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கொடநாட்டில் ஆறுமுகசாமி தரப்பினருக்கு சொந்தமாக ஒரு டீ எஸ்டேட் இருப்பதாகவும், இந்த எஸ்டேட்டில் ஜெயலலிதா, சசிகலா, கொடநாடு பங்களா தொடர்பான பல்வேறு ஆவணங்கள், ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த ஆவணங்கள், சொத்து பத்திரங்கள் குறித்தும், ஆறுமுகசாமியிடம் அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள் ஒப்பந்தம், அரசியல் தொடர்பில் இருக்கிறார்களா?, கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்திற்கு பிறகு உங்களை கட்சியில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் சந்தித்தார்களா?, கொடநாடு விவகாரத்தில் கைதான நபர்கள் உங்களை சந்தித்தார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை அவரிடம் கேட்டு தகவல்களை சேகரித்துள்ளதாக தெரிகிறது. செந்தில்குமாரிடம் பல்வேறு சர்ச்சைக்குரிய ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் விசாரணை நடத்தியுள்ளனர்….
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் பிரபல மணல் சப்ளையர் மகனிடம் விசாரணை
previous post