குன்னூர்: கொடநாடு காட்சி முனை பகுதியில் அத்துமீறி நுழையும் சுற்றுலா பயணிகளை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளன. மேலும், மாவட்டத்திற்குள் சுற்றுலா பயணிகள் வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நீலகிரி மாவட்டத்திற்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் இதமான கால நிலையில் இயற்கையை ரசித்தபடி தேயிலை தோட்டங்கள் மத்தியில் மேக மூட்டங்களை ரசித்தபடி புகைப்படம், செல்பி எடுக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள கொடநாடு காட்சி முனை பகுதியில் அத்துமீறி சுற்றுலா பயணிகள் நுழைந்து வருகின்றனர். வனத்துறை அதிகாரிகள் இல்லாததால் அத்துமீறி பள்ளத்தாக்கு நிறைந்த பகுதியில் சுற்றுலா பயணிகள் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அத்துமீறி நுழையும் சுற்றுலா பயணிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்….