செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே கழிவுநீர் தொட்டியில், கை, கால்களை கட்டிப்போட்டு வெட்டு காயங்களுடன், அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள்கோயில் பகுதியில், நரசிம்ம பெருமாள் கோயிலுக்கு சொந்தமான கார் பார்க்கிங் இடம் உள்ளது. இங்கு, யாரும் பயன்படுத்தப்படாத கழிவுநீர் தொட்டி அமைந்துள்ளது. நேற்று முன்தினம், அப்பகுதியில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், அங்கு சென்று, கழிவுநீர் தொட்டியின் மூடியை திறந்து பார்த்தனர். அதில், உடல் முற்றிலும் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.தகவலறிந்து மறைமலைநகர் தீயணைப்பு மீட்பு படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பொக்லைன் இயந்திரம் மூலம் சடலத்தை மீட்டனர். போலீசாரின் விசாரணையில், சுமார் 35 வயது ஆண் என தெரிந்தது. அவரது தலையில் வெட்டு காயங்களுடன், கை, கால்கள் கட்டப்பட்டு இருந்தன. இதையடுத்து போலீசார், சடலத்தை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சடலமாக கிடந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்து, கழிவுநீர் தொட்டியில் போட்டார்களா, தொழில் போட்டியா, ரவுடி கும்பலுடன் தகராறா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர். …