நாமக்கல் செப்.24: அனைவரும் தீபாவளி பண்டிகைக்கு கைத்தறி ஜவுளிகள் வாங்கி நெசவாளர்களுக்கு உதவ வேண்டும் என நாமக்கல் கலெக்டர் வேண்டுகோள் விடுத்தார். நாமக்கல் பலபட்டரை மாரியம்மன் கோயில் எதிரில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் ஷோரூமில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்க விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் உமா, சிறப்பு தள்ளுபடி விற்பனையை துவக்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது: கைத்தறி நெசவாளர்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு, கைத்தறி துணி ரகங்களுக்கு 30 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி வழங்கி வருகிறது. நாமக்கல் கோ-ஆப்டெக்ஸ் ஷோரூமில் காஞ்சிபுரம், சேலம், ஆரணி பட்டு புடவைகள், மென் பட்டு புடவைகள், கேவை, மதுரை, திண்டுக்கல், பரமக்குடி, திருச்சி மற்றும் சேலம் பகுதிகளில் தயாராகும் அனைத்து ரக காட்டன் புடவைகள், களம்காரி காட்டன் ஆகிய புடவைகள் தீபாளி பண்டிகைக்காக புதிய டிசைன்களில் வரவழைக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களின் ஊழியர்களுக்கு வட்டியில்லாத கடன் வசதியில் ஜவுளிகள் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு தீபாவளி விற்பனை இலக்கு ₹92 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலக்கை மிஞ்சி விற்பனை செய்யும் வகையில், அரசு ஊழியர்களும், பொதுமக்களும் கைத்தறி துணி ரகங்களை வாங்கி, நெசவாளர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவ வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார். கோ-ஆப்டெக்ஸ் மேலாளர் பாலசுப்ரமணியன், நாமக்கல் ஷோரூம் மேலாளர் செல்வாம்பாள் கலந்துகொண்டனர்.