கிருஷ்ணகிரி, ஆக.6: கிருஷ்ணகிரி மகாராஜகடை பகுதி ஆஞ்சநேயர் கோயில் திருவிழா நடந்தது. இதில் பங்கேற்பதற்காக வேப்பனஹள்ளி அடுத்த கோனேகவுண்டனூர் ஜெய்நகரைச் சேர்ந்த சூர்யா (18) என்பவர், தனது நண்பர்கள் 8 பேருடன் டூவீலர்களில் சென்றார். நாரலப்பள்ளி சிந்தகம்பள்ளி பகுதியில் அனைவரும் ஒன்றாக டூவீலரில் சென்ற போது, அப்பகுதியை சேர்ந்த திம்மராயன் என்பவர் அவர்களை வழிமறித்து, கூட்டமாக இவ்வழியில் எதற்காக செல்கிறீர்கள் என கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் திம்மராயன், வேலு(40), வேணுகோபால், அப்பு (எ) விஜய் ஆகிய 4 பேர், சூர்யா உள்பட 8 பேரை சரமாரியாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து சூர்யா மகாராஜகடை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து திம்மராயன், வேலு, வேணுகோபால், அப்பு ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். இதே போல், தங்களை சூர்யா தரப்பினர் தாக்கியதாக திம்மராயன் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குபதிவு செய்து சூர்யா, முனியப்பன் ஆகியோரை கைது செய்தனர். கைதான 6 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள சூர்யா தரப்பை சேர்ந்த பிரசாந்த், சம்பத், ராஜகுமார், மாதப்பன், ஜீவா, சதீஷ், அண்ணா துரை ஆகிய 7 பேர் மீதும் வழக்குபதிவு செய்து, தேடி வருகின்றனர்.