தர்மபுரி : தர்மபுரி கேரளா சமாஜத்தின் சார்பில் 20வது ஆண்டு ஓணம் திருவிழா நேற்று நடந்தது. விழாவிற்கு தலைவர் கிருஷ்ணன் உண்ணி தலைமை வகித்தார். செயலாளர் ஹரிகுமார் வரவேற்றார். துணை தலைவர் நாராயணசாமி, பொருளாளர் சத்யநாராயணன் முன்னிலை வைத்தனர். சிறப்பு விருந்தினராக அரிமா மாவட்ட முன்னாள் ஆளுநர் செல்வராஜ், சேலம் மண்டல அனைத்து வணிகர் சங்க தலைவர் வைத்திலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினர். விழாவில், சமாஜ உறுப்பினர்களின் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகளும், சினிமா பின்னணி பாடகர் ராகுல் ஹரியின் பாடல் நிகழ்ச்சி நடந்தது.தர்மபுரி லட்சுமி சிவசக்தி நடன பள்ளி ஆசிரியை சத்தியவதி குழுவினரின் பரதநாட்டியம், கடத்தூர் ரகு நடனப்பள்ளி ஆசிரியர் ரகுபதி குழுவினரின் மேற்கத்திய நடன நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நடன ஆசிரியை சிந்து விஜி குழுவினரின் கேரள பாரம்பரிய கைகொட்டை களி நடனம் நடந்தது. விழாவில், கேரள சமாஜ செயற்குழு உறுப்பினர் ராஜசேகர் மகாபலி சக்கரவர்த்தியாக வலம் வந்து அனைவருக்கும் ஆசி வழங்கினார். விழாவில் சமாஜ மகளிரணி சார்பில் போடப்பட்ட அத்தப்பூக்கோலம் அனைவரது பாராட்டையும் பெற்றது. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் 27 வகையான பதார்த்தங்களுடன் உணவு வழங்கப்பட்டது. விழாவில் சமாஜ உறுப்பினர்கள், குடும்பத்தினர்கள், நண்பர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கிருஷ்ணன் நன்றி கூறினார்….