கிருஷ்ணகிரி, ஆக.8: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பரவலான மழையால், கிருஷ்ணகிரி அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் விநாடிக்கு 621 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 8 மணி நிலவரப்படி, விநாடிக்கு 726 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து பாசன கால்வாய்கள் மற்றும் ஆற்றில் விநாடிக்கு 185 கனஅடியாக திறக்கப்பட்ட நீர், நேற்று காலை 427 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. அணையின் மொத்த உயரமான 52அடியில், தற்போது நீர்மட்டம் 50.80 அடியாக உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று முன்தினம் 2வது நாளாக பரவலாக மழை பெய்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழையளவு விவரம் வருமாறு(மில்லி மீட்டரில்): ஊத்தங்கரை 33.40, பாம்பாறு அணை- 16, போச்சம்பள்ளி- 8, பெணுகொண்டாபுரம்- 5.20, தளி- 5, நெடுங்கல்- 4.20, தேன்கனிக்கோட்டை – 3, கிருஷ்ணகிரி அணை- 2.40, கிருஷ்ணகிரி- 1.70 என பதிவாகியுள்ளது.