தஞ்சாவூர், ஜூலை16: மனைவிக்கு உடல்நிலையை சரி செய்வதாக கூறி 24,000 பெற்று மோசடி செய்த போலிச் சாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கூலித்தொழிலாளி தஞ்சை கலெக்டரிடம் மனு அளித்தார். தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் ஒன்றியம் விண்ணனுர் பட்டியை சேர்ந்த இளங்கோவன் என்ற கூலித்தொழிலாளி கொடுத்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
எனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாதபோது திருச்சனம்பூண்டி படுகையை சேர்ந்த முருகானந்தம் என்பவர் மூலமாக திருக்காட்டுப்பள்ளி பேருந்து நிலையம் பகுதியில் அருகே மருது என்பவர் குறி பார்த்து சொல்வதாக தெரியவந்தது : என் மனைவிக்கு உடல்நிலை சரியாக வேண்டும் என்பதால் அந்த மருது என்பவரிடம் பூஜை செய்ய கேட்டுக் கொண்டேன். இதற்காக அவர் ரூ. 24 ஆயிரத்தை என்னிடம் இருந்து பெற்றுக்கொண்டார். ஆனாலும் எனது மனைவி இறந்து விட்டார். அதற்குப் பிறகும் அந்த மருது என்பவர் என்னிடம் ரூ.50 ஆயிரம் பணம் கேட்டார். ஆனால் நான் பணம் தர மறுத்து விட்டேன்.
இதனால் மருமகன் போஸ் என்பவரிடம் குடியை நிறுத்துவதற்கு மந்திரம் செய்வதாகக்கூறி ரூ. 30 ஆயிரம் பெற்றுள்ளார். இப்படி மோசடி செய்து வரும் போலிச் சாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதுபோன்று வேறு யாரும் ஏமாந்து விடாதவாறு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து எங்களை ஏமாற்றி பெற்ற பணத்தை மீட்டு தர வேண்டும். இவர் அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.