கூட்டு குடிநீர் தொட்டிகளை முறையாக சுத்தம் செய்ய கோரிக்கை

உடுமலை, ஜூன் 26: உடுமலை பகுதிகளில் உள்ள கூட்டு குடிநீர் தொட்டிகளை முறையாக சுத்தம் செய்ய அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உடுமலை வட்டத்துக்கு திருமூர்த்தி அணையில் இருந்து மூன்று கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அணைக்கு அருகில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்கள் தற்போது தனியார் பராமரிப்பில் விடப்பட்டுள்ளன. தனியார் நிறுவனங்கள் போதுமான ஆட்களை நியமிக்காத காரணத்தால் சுத்திகரிப்பு நிலையம், உயர்மட்ட தொட்டிகள் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளன. மேலும், நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு முறையாக தண்ணீர் வழங்க இயலாத சூழல் உள்ளது. எனவே, குடிநீர் தொட்டிகளை முறையாக சுத்தம் செய்து சரியான அளவு குளோரின் கலந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறதா என்பதை அரசு அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.

ஏனெனில் சமீப காலமாக வயிற்றுப்போக்கினால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கு குடிநீரில் உள்ள கிருமிகளே காரணம் என கூறுகின்றனர். எனவே, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், உடுக்கம்பாளையம் கிராமத்தில் இருந்து புங்கமுத்தூர் செல்லும் கிராம சாலை மற்றும் குண்டலப்பட்டி வரை செல்லும் தார்சாலையும் முற்றிலும் சிதிலமடைந்து போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இந்த, சாலைகள் போடப்பட்டு 10 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன. எனவே, இந்த இரண்டு சாலைகளையும் போதிய நிதி ஒதுக்கீடு செய்து புதுப்பித்து தரவேண்டும். மேலும், உடுக்கம்பாளையம் முதல் பிஎன் சாளையூர் வரை சுமார் 2 கிமீ தூரம் உள்ள மண் சாலையை தார் சாலையாக மாற்றி தரவேண்டும் என அப்ப்குதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அம்மா உணவக ஊழியர்களுக்கு 8 ஆண்டுக்கு பின் ஊதிய உயர்வு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை; பொதுமக்கள் பாராட்டு

உளவுத்துறையில் கழிவுசெய்யப்பட்ட 27 வாகனங்கள் 11ம் தேதி ஏலம்: காவல்துறை அறிவிப்பு

ஓடும் பேருந்தில் நடத்துனர் பலி