சென்னை: கூட்டுறவு சங்கங்களில் 5 சவரனுக்கு கீழ் நகைக்கடன் பெற்றவர்களின் கடன் தள்ளுபடி குறித்து ஒரு வாரத்தில் அரசாணை பிறப்பிக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் கலந்துக் கொண்ட பின்னர், அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் தள்ளுபடி குறித்து ஒரு வாரத்தில் அரசாணை வெளியிடப்படும். நகைக்கடன் தள்ளுபடியால் சுமார் 11 லட்சம் பேர் பயனடைவார்கள். 15 கூட்டுறவு சங்கங்களில் சுமார் 12 கோடி ரூபாய் முறைகேடு குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர், 4,450 விவசாய கூட்டுறவு கடன் சங்கங்கள் 6 மாதங்களுக்குள் கணினிமயம் ஆக்கப்படும் எனவும் கூட்டுறவுத் துறையில் வெளிப்படைத் தன்மையுடன் பணியாளர்கள் நியமிக்கப்படுவர் என்றும் கூறினார். மேலும் படித்த இளைஞர்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்க முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அமைச்சர் ஐ.பெரியசாமி குறிப்பிட்டார். தொடர்ச்சியாக சுயஉதவி குழுக்களுக்கு வழங்கக்கூடிய கடன்களின் வட்டியை குறைக்க ஆலோசனை நடத்தி வருகிறோம். அது தற்போது ஆய்வில் உள்ளது. விரைவில் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்படும். தமிழக சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றுவதற்கு தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் கூறினார். …