கூட்டணி என்ற பெயரில் எல்லா பக்கமும் பேரம் பேசும் அரசியல் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது

விழுப்புரம், பிப். 7: கூட்டணி என்ற பெயரில் எல்லா பக்கமும் பேரம் பேசும் அரசியல் தமிழகத்தில் நடந்து கொண்டிருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். விழுப்புரத்தில் சுதந்திர போராட்ட வீரர் கம்யூனிஸ்ட் இயக்க தலைவர் சங்கரய்யா படதிறப்பு விழா நடந்தது. மாநில செயலாளர் மார்க்சிஸ்ட் பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் கூறுகையில், மக்களவை தேர்தல் பணியை துவக்கியுள்ளோம். தமிழகத்தில் பாஜக, அதிமுக கூட்டணியிட்டு போட்டியிட்டாலும், தனித்து நின்றாலும் அவர்களை திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தோற்கடிக்கும். பிரதமர் மோடி மக்களவையில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசுவதைபோல் 300, 400 இடங்களை பிடிப்போம் என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒரு இடத்தில்கூட டெபாசிட் வாங்க முடியாது. சென்னை, தூத்துக்குடியில் மழை, புயல் சேதம் ஏற்பட்டபோது தமிழக அரசு கேட்ட ரூ.37,000 கோடி நிவாரண நிதிக்கு ஒரு ரூபாய்கூட வழங்கவில்லை.

தமிழகத்தில் 3 நாள் சுற்று பயணம் மேற்கொள்ள பிரதமர் மோடி கோயில்களுக்கு சென்றார். ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு மணி நேரம் ஒதுக்கி ஆறுதல், உதவி செய்யவில்லை. தமிழகத்தை வஞ்சித்து, துரோகம் செய்ததற்கு நிச்சயம் மக்கள் அவர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள். யாராவது வருவார்களா என்று அதிமுகவினர் கடைவிரித்து உட்கார்ந்திருக்கிறார்கள். எங்கள் கூட்டணியை பிரிக்கலாம் என்று பகல் கனவு கண்டு கொண்டிருக்கின்றனர். எங்கள் கூட்டணியில் குழப்பம் இல்லை. கடந்த முறை மதுரை, கோவையில் போட்டியிட்டோம். இந்த தேர்தலில் கூடுதல் இடம் கேட்டிருக்கிறோம். எப்போது தேர்தல் வந்தாலும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி 40 ெதாகுதிகளிலும் வெற்றிபெறும். கூட்டணிக்காக எல்லா பக்கமும் பேரம் பேசும் அரசியல் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. பாஜகவை எதிர்ப்பவர்களை ஈடியை வைத்து மிரட்டுகின்றனர். 90 சதவீத நாடுகளில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தவில்லை. வளர்ச்சியடைந்த நாடுகளிலும் சீட்டு முறைதான் உள்ளது, என்றார். முன்னாள் எம்எல்ஏ ராமமூர்த்தி, மாவட்ட செயலாளர் சுப்பிரமணி, நிர்வாகி மூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்