சிவகங்கை, ஜூன் 24: ஒரு நாளைக்கு 100 கிலோவிற்கு கூடுதலாக கழிவுகள் உருவாக்கக் கூடிய நிறுவனத்தினர் மறு சுழற்சி வசதி ஏற்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை நகராட்சி நிர்வாகம் சார்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
சிவகங்கை நகராட்சி பகுதிகளில் நாளொன்றுக்கு சராசரியாக 100 கிலோவிற்கு கூடுதலாக திடக்கழிவுகள் உருவாக்கக் கூடிய கட்டிடங்களை பயன்படுத்தும் மத்திய, மாநில அரசுத்துறைகள், நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், குடியிருப்புகள்(300க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட வளாகம்),மருத்துவமனைகள், சிகிச்சை நிலையங்கள், பள்ளிகள், கல்லூரிகள், இதர கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள், வர்த்தக மால்கள், வியாபார நிறுவனங்கள், விளையாட்டு அரங்குகள், வளாகங்கள்,
துணி விற்பனை நிலையங்கள், உணவு விடுதிகள், சந்தை ஒப்பந்தம் எடுத்தோர் உள்ளிட்டவர்கள் அதிக கழிவுகளை உருவாக்குபவர்கள் என தகுதியுடையவர்களாவர். எனவே 100கிலோவிற்கு கூடுதலாக கழிவுகளை உருவாக்குபவர்கள் நகராட்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று பதிவு செய்து தங்கள் வளாகத்தில் உருவாகும் கழிவுகளை மறு சுழற்சி செய்வதற்கு ஏற்ப உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது திடக்கழிவு மேலாண்மை விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.