திருமயம்: புதுக்கோட்டை மாவட்டத்துக்கு பட்டறிவு பயணமாக வந்த அரியலூர் மாவட்டத்தை சார்ந்த ஊராட்சி தலைவர்கள் திருமயம் ஒன்றியம், குழிபிறை ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களை நேற்று நேரில் பார்வையிட்டனர். ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை மூலம் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அரியலூர், திருமானூர், ஆண்டிமடம், டி.பழூர், செந்துறை, ஜெயங்கொண்டம் ஆகிய 6 ஒன்றியங்களை சார்ந்த 40 ஊராட்சிகளில் தலைவர்கள் புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கு 3 நாள் பட்டறிவுப் பயணம் மேற்கொண்டனர். இப்பயணத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்கள் 5 பேர், ஊராட்சி தலைவர்களில் ஆண்கள் 20 பேர், பெண்கள் 20 பேர் பங்கேற்றனர். கடந்த 14, 15, 16ம் தேதி ஆகிய மூன்று நாட்கள் இந்த பட்டறிவுப் பயணம் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 14 ம் தேதி அன்னவாசல் ஒன்றியத்தில் தளிஞ்சி ஊராட்சியை பார்வையிட்டனர். இதைத்தொடர்ந்து 15 ம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் பயணம் மேற்கொண்டனர். பயணத்தின் நிறைவு நாளான நேற்று புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஒன்றியம், குழிபிறை ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களை பார்வையிட்டனர்.