Monday, September 9, 2024
Home » குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

by kannappan

சென்னை: குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்போம். அவர்களுக்கு கல்வி அளித்து வாழ்வில் ஒளியேற்றுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: குழந்தைகளின் நலன் பேணும் நெறியில், குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வை வளர்க்கும் நாளாக உலகெங்கும் கடைபிடிக்கப்படும் நாள் ஜூன் 12. நாளைய நவீன உலகை உருவாக்கும் சிறந்த சிற்பிகள் நம் குழந்தைச் செல்வங்கள். அவர்களது திறமைகளைக் கண்டறிந்து அத்திறமைகளை மேம்படுத்தி, அவர்களின் உரிமைகளைப் பாதுகாத்து, அவர்களை கருத்தோடு பராமரிக்க வேண்டியது தமிழ்நாட்டு மக்களின் கடமையாகும். கல்விச் செல்வம் பெற வேண்டிய சமயத்தில், கடுமையான வேலைச் சுமைகளைச் சுமந்து நிற்கின்ற, குழந்தை தொழிலாளர்முறை என்ற கொடுமையான வன்முறையிலிருந்து விடுவித்து, அவர்களுக்கு இனிமையான குழந்தைப் பருவத்தினையும், முறையான கல்வியினையும் உறுதி செய்வதே தமிழக அரசின் குறிக்கோளாகும்.அக்குறிக்கோளை அடையும் பொருட்டு அனைத்து வகையான தொழிலகங்களிலிருந்தும் குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலுமாக அகற்றி குழந்தை தொழிலாளர் இல்லா மாநிலம் என்ற திட்டத்தினையும் துரிதமாக நடைமுறைப்படுத்திட இவ்வரசு உறுதி பூண்டுள்ளது. நம் அரசு குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிடும் வகையில், பணியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தைகளை முறையான பள்ளிகளில் சேர்த்து, அவர்களுக்கு அரசின் மூலமாக சீருடைகள், பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், புத்தகப் பைகள், காலணிகள், கல்வி உபகரணங்கள், சத்தான மதிய உணவு, கட்டணமில்லாப் பேருந்து பயண அட்டை, உயர் கல்வி பயிலும் முன்னாள் குழந்தைத் தொழிலாளர்களுக்கு அவர்களின் கல்விக் காலம் முழுமைக்கும் ரூ.500 வீதம் மாதாந்திர உதவித் தொகை வழங்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.தற்போது ஒன்றிய அரசால் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மட்டுமின்றி 18 வயது நிறைவடையாத வளரிளம் பருவத்தினரையும் அபாயகரமான தொழில்களில் அமர்த்தப்படுவதை முற்றிலுமாக தடை செய்து வெளியிடப்பட்ட சட்ட திருத்தத்தை அரசு மிகத் தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டை, குழந்தைத் தொழிலாளர்களற்ற மாநிலமாக மாற்ற நம் அரசு மேற்கொள்ளும் சீரிய முயற்சிகளுக்கு அரசு, அரசு சாரா நிறுவனங்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தொழிற்சங்கங்கள், தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள், பொதுமக்கள் ஆகிய அனைவரும் சீரிய ஒத்துழைப்பு நல்க வேண்டும். குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்போம். அவர்களுக்குக் கல்வி அளித்து வாழ்வில் ஒளியேற்றுவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

You may also like

Leave a Comment

20 + 18 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi