காரமடை, மே 28: காரமடை அருகே குழந்தையை கடத்த வந்ததாக நினைத்து வடமாநில வாலிபரை மின்கம்பத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் காரமடை அடுத்துள்ள திம்மம்பாளையம்புதூர் பகுதியில் நேற்று முன்தினம் சந்தேகத்திற்கிடமான வகையில் வடமாநில வாலிபர் ஒருவர் அப்பகுதியில் சுற்றித்திரிந்து வந்தார். அவரை பலமுறை அப்பகுதி மக்கள் எச்சரித்து அனுப்பியும், அவர் மீண்டும் அப்பகுதியில் உள்ள குழந்தைகளின் வீட்டு அருகே சுற்றித்திரிந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து அந்த வாலிபரை பிடித்து அங்குள்ள மின்கம்பத்தில் கட்டி போட்டு தாக்கியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காரமடை போலீசார் அங்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் இருந்து வாலிபரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த சம்பவம் குறித்து காரமடை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.