பள்ளிகொண்டா, ஜூலை 21: பள்ளிகொண்டா அருகே 7 மாதத்திற்கு முன்பு ஒன்றறை வயது மகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அவரது கணவரை வரதட்சணை கொடுமை சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி கிராமத்தை சேர்ந்தவர் குமார், கார் மெக்கானிக். இவரது மனைவி பிரவீனா(22). இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு மகள் இருந்தார். குமார் தனது தாய், மனைவியுடன் கந்தனேரி தேசிய நெடுஞ்சாலை அருகேயுள்ள விவசாய நிலத்தில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்தாண்டு டிசம்பர் மாதம் 5ம் தேதி பிரவீனா தனது மகளுடன் அருகிலுள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அதனையடுத்து அவரது கணவர் குமார் பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே பிரவீனாவின் தந்தை தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் புகார் அளித்திருந்தார். மேலும் இந்த வழக்கில் ஆர்டிஓ விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் பிரவீனாவின் கணவர் குமார் வரதட்சணை கொடுமை செய்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து ஆர்டிஓ பரிந்துரையின்பேரில், டிஎஸ்பி உத்தரவிட்டதையடுத்து வரதட்சணை கொடுமை, தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்த போலீசார் குமாரை நேற்று கைது செய்தனர்.