குழந்தைக்காக டாக்டர் மருமகளுக்கு கோமியம் குடிக்க வைத்த கொடுமை மருமகள் தற்கொலை வழக்கில் கணவர், மாமியாருக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டு சிறை உறுதி: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதுடன் குழந்தை பாக்கியத்திற்காக கோமியத்தை குடிக்கவைத்து டார்ச்சர் செய்ததால் பெண் டாக்டர் தற்கொலை செய்த வழக்கில் கணவருக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டு சிறைத் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது. சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் டாக்டராக வேலை செய்து வந்தவர் மரியானோ ஆன்டோ புருனோ (36). இவருக்கும் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வந்த அமலி விக்டோரியா (32) என்பவருக்கும் கடந்த 2005ம் ஆண்டு திருமணம் நடந்தது. அயனாவரம் பகுதியில் மாமியர், மாமனார், கணவருடன் இவர் வசித்து வந்தார். இந்நிலையில், 2007ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பின்னர், அமலி தாய் வீட்டிற்கு சென்று மீண்டும் கணவர் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, அமலி பெயரில் உள்ள சொத்துகளை தங்கள் பெயரில் எழுதி வைக்க சொல்லியும் துன்புறுத்தி தாக்கியுள்ளனர். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான டாக்டர் அமலி கடந்த 2014 நவம்பர் 5ம் தேதி பாத்ரூமில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து, மரியானோ ஆன்டோ புருனோ, அவரது தாய் அல்போன்சாள், தந்தை ஆகியோர் கைது செய்யப்பட்டு சென்னை மகளிர் நீதிமன்றத்தில், இறந்த அமலியின் கணவர் மற்றும் மாமியார் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கூறி இருவருக்கும் 7 ஆண்டு சிறை தண்டனையும் இருவருக்கும் தலா ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். தந்தை விடுதலை செய்யப்பட்டார்.இந்த தீர்ப்பை எதிர்த்து மரியானோ ஆன்டோ புருனோ, அவரது தாய் அல்போன்சாள் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் எஸ்.சுகேந்திரன், இறந்துபோன பெண்ணின் தாய் தரப்பில் எஸ்.சங்கர் ஆகியோர் ஆஜராகினர். கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் வாதிடும்போது, இறந்துபோன அமலிக்கு 2014ல் கர்ப்பம் கலைந்துள்ளது. அவரிடம் வரதட்சணை கேட்டு அவரது கணவரும், மாமியாரும் துன்புறுத்தியுள்ளனர். குழந்தை இல்லை என்பதற்காக வீட்டில் பூஜைகளை நடத்தி அமலியை கோமியம் குடிக்க வற்புறுத்தியுள்ளனர். அனைத்து ஆதாரங்களையும் போலீசார் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளனர். எனவே, மேல் முறையீட்டு வழக்கு தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, ‘‘இந்த வழக்கில் அனைத்து சாட்சியங்களும் தீர ஆய்வு செய்து விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நல்ல படித்த டாக்டர் தற்கொலைக்கு செல்வதற்கு வாய்ப்பில்லை என்றே இந்த நீதிமன்றம் கருதுகிறது. எனவே, அவரது சாவுக்கு காரணமான மனுதாரர்களுக்கு விசாரணை நீதிமன்றம் அளித்த தண்டனையை இந்த நீதிமன்றம் உறுதி செய்கிறது” என்று தீர்ப்பளித்தார்….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை