குழந்தைகளின் கல்வி கட்டணத்திற்காக வைத்த ரூ.20 ஆயிரத்தை கணவன் சூதாடி தோற்றதால் மனைவி தற்கொலை: சென்னை நந்தம்பாக்கத்தில் சோக சம்பவம்

சென்னை: குழந்தைகளின் கல்வி கட்டணத்திற்காக சிறுக சிறுக சேமித்து வைத்த ₹20 ஆயிரத்தை சூதாட்டத்தில் கணவன் தோற்றத்தால் மனம் உடைந்த மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது, சென்னை நந்தம்பாக்கத்தில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.சென்னை நந்தம்பாக்கம் வடக்கு மாடவிதியை சேர்ந்தவர் சுரேஷ்பாபு (48), ஆட்டோ டிரைவர். குடி மற்றும் சூதாடும் பழக்கம் உடையவர். இவரது மனைவி புவனேஷ்வரி (46). தனியார் மருத்துவமனைக்கு சமையல் செய்து கொடுக்கும் வேலை பார்த்து வந்துள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. 2 மகன்கள் உள்ளனர். சுரேஷ்பாபு, ஆட்டோ ஓட்டி கிடைக்கும் பணத்தை வீட்டில் கொடுக்காமல் சீட்டாடி அழித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் சுரேஷ்பாபு, சீட்டாடுவதில் தோற்று குடிபோதையில் வீட்டுக்கு வருவது வழக்கம். பிறகு மனைவியிடம் சண்டைபோட்டு சூதாட பணம் கேட்டு தகராறு செய்வார். இதன் காரணமாக, புவனேஷ்வரி குடும்பத்தை நடத்த முடியாமல் கடும் அவதிப்பட்டு வந்துள்ளார். இருப்பினும் புவனேஸ்வரிக்கு அவரது தந்தை ராஜேந்திரன் பக்க பலமாக இருந்து பல உதவிகளை செய்து வந்துள்ளார்.இந்நிலையில், நேற்று முன்தினம் குடிபோதையில் வீட்டுக்கு வந்த சுரேஷ்பாபு மனைவியிடம் தகராறு செய்துவிட்டு, பிள்ளைகளின் கல்வி கட்டணத்திற்காக சிறுக சிறுக புவனேஷ்வரி சேர்த்து வைத்திருந்த ₹20 ஆயிரத்தை எடுத்துச்சென்றுள்ளார். இதை கவனித்த புவனேஸ்வரி தடுத்து நிறுத்தி அந்த பணத்தை பிடுங்க முயற்சித்துள்ளார். ஆனால் சுரேஷ்பாபு அவரை  வலுக்கட்டாயமாக பிடித்து கீழே தள்ளிவிட்டு வெளியே சென்றுவிட்டார். தரையில்  விழுந்து புரண்டு கதறி அழுத புவனேஷ்வரி, குழந்தைகளின் கல்வி கட்டணத்திற்கு சிறுக சிறுக சேர்த்து வைத்த பணமும் போய்விட்டதே என அழுது புலம்பினார். மேலும், அந்த பணத்தை கணவன் சூதாட்டத்தில் தோற்றுவிட்டதை அறிந்த புவனேஷ்வரி மேலும் மனமுடைந்துள்ளார். இந்நிலையில், குழுந்தையை அருகில் விளையாட அனுப்பி விட்டு மின்விசிறியில் துப்பட்டாவால் புவனேஷ்வரி தூக்கிட்டுக் கொண்டார். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை கீழே இறக்கி அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், புவனேஷ்வரி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்த நந்தம்பாக்கம் போலீசார் புவனேஷ்வரியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கணவர் சுரேஷ் பாபுவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நந்தம்பாக்கத்தில் கணவனின் சூதாட்டத்தால் குடும்ப தலைவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது….

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்