குளித்தலை, செப். 28: தினகரன் செய்தி எதிரொளியாக நீல பெருமாள் கோயில் அலுவலகம் அருகே இருந்த சேதமடைந்த சுற்றுச்சுவர் அகற்றப்பட்டது. கரூர் மாவட்டம் குளித்தலை டவுன்ஹால் தெருவில் பழமை வாய்ந்த நீலமேகப் பெருமாள் திருக்கோயில் உள்ளது. இக்கோயில் நகர மத்திய பகுதியில் அமைந்துள்ளது. கோயில் எதிரே மாரியம்மன் கோயில் அரசு நடுநிலைப்பள்ளி, அருகில் தனியார் பள்ளி, அதன் அருகே அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மாரியம்மன் கோயில் ஆகியவை உள்ளன. இதனால் காலை முதல் மாலை வரை இப்போது பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் அதிக நடமாட்டம் தொடர்ந்து இருக்கும்.
இந்நிலையில் ஆண்டார் மெயின் ரோட்டில் இருந்து காங்கிரஸ் ரோடு வழியாக இப்பகுதிக்குவர பாதை உள்ளது. அப்பகுதியில் தான் கோவில் அலுவலகம் செயல்பட்டு வருகிறது அதன் அருகே தடுப்பு சுவர் ஒன்று விரிசல் உடன் எந்த நேரத்திலும் விழும் அபாய நிலையில் உள்ளது. மேலும் காங்கிரஸ் ரோடு வழியாக அரசு தனியார் பள்ளி மாணவ மாணவிகள் கோவியிக்கு செல்லும் பக்தர்கள் இந்த வழியே வந்து செல்கின்றனர். தற்போது மழைக்காலம் என்பதால் உயிர்ச்சேதம் ஏற்படும் முன்னரே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆபத்தான நிலையில் உள்ள தடுப்பு சுவரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி மாணவர்கள் பக்தர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதுகுறித்து கடந்த 26ம் தேதி தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இந்த செய்தியின் எதிரொளியாக ஆபத்தான நிலையில் இருந்த சுற்றுச்சுவர் முற்றிலுமாக இடித்து அகற்றப்பட்டது. இதனால் அவ்வழியாக செல்லும் பள்ளி மாணவ மாணவிகள் முதியவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். உடனடியாக நடவடிக்கை எடுத்த இந்து அறநிலைத்துறை அதிகாரிகளுக்கும் செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.