குளத்தூர், அக். 12: தமிழ்நாடு அரசின் கல்வித்துறையால் வருடந்தோறும் நடத்தப்படும் கலைத்திருவிழா, கடந்த வாரம் முதல் தமிழகம் முழுவதும் துவக்கப்பட்டு மாணவர்களுக்கான கலைநிகழ்ச்சி போட்டிகளாக நடத்தப்பட்டு வருகிறது. குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கலைத் திருவிழா நிகழ்ச்சியின் துவக்கவிழா, நேற்று முன்தினம் மாலை நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் சற்குணராஜ் தலைமை வகித்து துவக்கிவைத்தார். பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ரமா, முதுநிலை ஆசிரியர் கென்னடி, தமிழாசிரியை ஜெயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்து குத்துவிளக்கேற்றினர். தொடர்ந்து நடனம், பாடல், நாடகம், பேச்சுப்போட்டி, முன்கலைப்போட்டி, சிற்பம் அமைத்தல், கிராமிய பாடல்கள் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. குளத்தூர் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மேலாளர் மாதவன் கலந்து கொண்டு கலைநிகழ்ச்சி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். உடற்கல்வி ஆசிரியர் கனகராஜ் நன்றி கூறினார். ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.