குளச்சல் அருகே மகன் வாங்கிய கடனுக்கு வீட்டை விற்ற கவலையில் மீனவர் தற்கொலை

குளச்சல், ஜூலை 21: குளச்சல் அருகே வாணியக்குடியை சேர்ந்தவர் ஸ்டீபன் (65). கடலில் மீன் பிடித்தொழில் செய்து வந்தார். இவரது மனைவி ஜார்ஜ் மேரி. இத்தம்பதிக்கு 2 ஆண், 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. இதில் இளைய மகன் விசைப்படகு வாங்கியதில் கடன் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கடனை அடைக்க இளைய மகன் ஸ்டீபன்-ஜார்ஜ் மேரி தம்பதி தங்கியிருந்த சொந்த வீட்டை விற்றாராம். இதனால் ஸ்டீபன் மற்றும் மனைவி ஜார்ஜ்மேரி இருவரும் குறும்பனை வயல் காலனியில் உள்ள இளைய மகள் வீட்டில் கடந்த 2 வருடங்களாக வசித்து வருகின்றனர். இருப்பினும் மகன் கடனை அடைக்க வீட்டை விற்றதால் ஸ்டீபன் கடந்த சில நாட்களாக மனம் உடைந்து காணப்பட்டு வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் ஸ்டீபன் சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றார். மறுநாள் காலை அவரது மனைவி சமையல் அறை திறந்து பக்கத்து அறையை பார்க்கும்போது ஸ்டீபன் தகர கூரை வேயப்பட்டிருந்த இரும்பு பைப்பில் தூக்குப்போட்டு இறந்து கிடந்தது தெரியவந்தது. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி