குளச்சல், பிப்.8: குளச்சல் அருகே உடையார்விளை பகுதியை சேர்ந்தவர் பால்நாடார் (48). மளிகைக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று பால்நாடார் காய்ச்சலுக்கு சிகிட்சை பெற அதே பகுதியை சேர்ந்த தனது உறவினரான நாகேந்திரன் என்பவருடன் பைக்கில் உடையார்விளையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு புறப்பட்டார். பைக்கை நாகேந்திரன் ஓட்டினார். திங்கள்நகர்-குளச்சல் சாலையில் சென்றபோது, நாகேந்திரன் கை சைகை காட்டி பைக்கை திருப்ப முயன்றார். அப்போது பின்னால் கல்லுக்கூட்டம் செட்டிவிளையை சேர்ந்த விஜய் (24) என்பவர் ஓட்டி வந்த பைக் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் பால்நாடாரும், விஜயும் படுகாயமடைந்தனர். உடனே அவர்கள் இருவரும் மீட்கப்பட்டு உடையார்விளை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் குளச்சல் போலீசார் விஜய் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.