குளச்சல், செப்.11: குளச்சல் செம்பொன்விளை ஆலுவிளையை சேர்ந்தவர் மரிய ஆண்டனி. அவரது மகன் ஆல்பன் (29). வெல்டிங் பட்டறை ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். ஆல்பன் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து தனது பைக்கில் காந்தி சந்திப்பு பகுதியில் இருந்து வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். மெயின்ரோட்டில் தனியார் வங்கி அருகே சென்ற போது எதிரே வந்த குளச்சல் லியோன் நகரை சேர்ந்த சுகேஷ் (38) ஓட்டி வந்த பைக் திடீரென ஆல்பனின் பைக் மீது மோதியது.
இதில் இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில் படுகாயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் ஆல்பனை மீட்டு அருகேயுள்ள தனியார் மருத்துவமனையிலும், சுகேஷை மீட்டு உடையார்விளையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து ஆல்பன் குளச்சல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் சுகேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.