குற்றால அருவிகளில் தண்ணீர் அதிகரிப்பு ஐந்தருவியில் குளிக்க தடை

தென்காசி,செப்.23: குற்றாலம் அருவிகளில் நேற்று இரவு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் பாதுகாப்பு கருதி ஐந்தருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மெயின் அருவியில் ஓரமாக நின்று குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர். குற்றாலத்தில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்கியது முதல் அருவிகளில் தொடர்ந்து தண்ணீர் நன்றாக வருகிறது. கடந்த இரண்டு தினங்களாக சாரல் இல்லாமல் இருந்த நிலையில் நேற்று மதியம் முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவில் சற்று சாரல் பெய்தது. இதன் காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. மெயின் அருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் தண்ணீர் பரந்து விழுகிறது. ஐந்தருவியில் இரண்டு பிரிவுகள் ஒன்றாக இணைந்து ஒரே பிரிவாக தண்ணீர் விழுகிறது. இரவு நேரம் மேலும் தண்ணீர் அதிகரிக்கலாம் என்ற முன் கணிப்பில் ஐந்தருவியில் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். மெயின் அருவியிலும் அருவியின் மையப்பகுதிக்கு செல்ல முடியாதவாறு தடுப்பு அமைத்து ஓரமாக நின்று மட்டும் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர். பழைய குற்றால அருவி, புதிய அருவி ஆகியவற்றில் ஓரளவு தண்ணீர் நன்றாக வருகிறது. சுற்றுலாப்பயணிகள் கூட்டம் குறைவாக காணப்பட்டது.

Related posts

15 ஆண்டுகளை கடந்த அரசு வாகனங்கள் பதிவுச்சான்று புதுப்பிப்பு ஓராண்டு நீட்டிப்பு தமிழக அரசு உத்தரவு

ஒருமுறை பயன்படுத்திய 76 ஆயிரம் லிட்டர் சமையல் எண்ணெய் பயோ டீசலாக மாற்றம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தகவல்

பெண் டாக்டரிடம் ₹1 லட்சம் மோசடி பேர்ணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் பார்சலில் தடை செய்யப்பட்டுள்ள பொருள் அனுப்பியதாக கூறி