குறைந்த விலைக்கு விற்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்தனர் ஆந்திராவில் வாகனங்கள் திருடி தமிழகம், கர்நாடகாவில் விற்பனை

* ₹1 கோடி மதிப்பிலான 107 பைக்குகள், டிராக்டர் பறிமுதல்* வேலூர், சென்னையை சேர்ந்தவர்கள் உட்பட 11 பேர் கைதுசித்தூர் : சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக ஆந்திராவில் வாகனங்களை திருடி தமிழகம், கர்நாடகாவில் குறைந்த விலைக்கு விற்பனை செய்த வேலூர், சென்னையை சேர்ந்தவர்கள் உட்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ₹1 கோடி மதிப்புள்ள 107 பைக்குகள், டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்ட எஸ்பி செந்தில்குமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:  சித்தூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு நகரங்களில் பைக்குகள் திருட்டு தொடர்பாக, அந்தந்த பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து, மாவட்டம் முழுவதும் 4 தனிப்படை குழு அமைக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். மேலும் திருட்டு போன பைக்குகளை மீட்கும் பணியில் போலீசார் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த 4 பேர் உட்பட மொத்தம் 11 பேரை கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில், சித்தூர் மாவட்டம், ஆதமரி அடுத்த அதரபள்ளி கிராமத்தை சேர்ந்த வினோத்குமார்(25), கீனாட்டம் பள்ளி கிராமத்தை சேர்ந்த ராஜி(47), சித்தூர் அடுத்த பிரசாந்த் நகர் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன்(32), வரதபாளையம் அடுத்த காரிபாக்கம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ்(27), சுப்பிரமணியம்(18), யாதமரி அடுத்த அட்டிகாரிபள்ளி கிராமத்தை சேர்ந்த ஜோதி(50), சத்தியவேடு பகுதியை சேர்ந்த யுகாந்தர்(26), தமிழ்நாடு மாநிலம், திருவள்ளூர் மாவட்டம், காட்டூர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார்(27), சென்னை ரெட் ஹில்ஸ் பாரதிதாசன் நகரை சேர்ந்த ஜெயச்சந்திரா(55), வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த மசிகம் கிராமத்தை சேர்ந்த முரளி(25), குமரேசன்(34) என்பது தெரியவந்தது. மேலும், இவர்களிடம் நடத்திய விசாரணையில், அனைவரும் தீய பழக்கங்களுக்கு அடிமையாகி சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக பலமநேர், சித்தூர், புத்தூர், சிட்டி ஆகிய பகுதிகளில் உள்ள கடை, வணிக வளாகம், மார்க்கெட், ஓட்டல்கள் முன்பு நிறுத்தப்பட்டிருக்கும் பைக்குகளை நோட்டமிட்டு திருடி விற்பனை செய்துள்ளனர். பைக்குகள் மிக குறைந்த விலைக்கு விற்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் திருடிய பைக்குகளை விற்பனை செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து ₹1 கோடி  மதிப்புள்ள 107 பைக்குகள் ஒரு டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.சித்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 35 பைக்குகள், புத்தூரில் 37 பைக்குகள், பலமநேரில் 28 பைக்குகள், ஸ்ரீசிட்டி பகுதியில் 7 பைக்குகள் மற்றும் ஒரு டிராக்டரை திருடியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்….

Related posts

ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு வழக்கு; அதிமுக மாஜி அமைச்சருக்கு இடைக்கால ஜாமீன் இல்லை: முன்ஜாமீன் மனு குறித்து இன்று பரிசீலனை

திருப்பத்தூர் அருகே கணவரின் தகாத உறவால் குழந்தையை கிணற்றில் வீசி கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய் கைது: ராணுவ வீரரிடம் போலீசார் விசாரணை

புதுச்சேரியில் பாக்கெட் சாராயம் வாங்கி குடித்த முதியவர் சாவு