குறைந்தபட்ச ஊதியம் வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை

 

நெல்லை,செப்.10: நெல்லை மாவட்டத்தில் குறைந்தபட்ச ஊதியம் வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக தொழிலாளர் உதவி ஆணையர் முருகபிரசன்னா தகவல் தெரிவித்துள்ளார். 2024 ஆகஸ்ட் மாதத்திற்கான குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின் கீழ் திரவ பெட்ரோலிய எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கும் நிறுவனங்களில் குறைந்தபட்ச ஊதியம் வழங்குவது தொடர்பாக, நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலக எல்லைக்கு உட்பட்ட தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் சிறப்பு ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் குறைந்தபட்ச கூலி சட்டத்தின் கீழ் 24 நிறுவனங்களில் சிறப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 4 நிறுவனங்கள் கண்டறியப்பட்டு அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் மற்றும் நிலுவைத் தொகையாக ரூ.1,82,439 வழங்கக்கோரி நான்கு கேட்பு மனுக்கள் நெல்லை இணை ஆணையர் அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் 18 தொழிலாளர்கள் பயன் பெறுவர். இத்தகவலை நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முருகபிரசன்னா வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

 

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி