மயிலாடுதுறை,அக்.1: மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வருகை புரிந்து மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர். இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டாமாறுதல், கோரி 83 மனுக்களும், வேலைவாய்ப்பு கோரி 58 மனுக்களும், முதியோர், மாற்றுத்திறனாளிகள், மற்றும் விதவை உதவித்தொகைகோரி 49 மனுக்களும், புகார் தொடர்பான மனுக்கள் 51 மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி உதவிதொகை, வங்கிகடன், மாற்றுத்திறனாளி உபகரணங்கள் கோரி 43 மனுக்களும், அடிப்படை வசதி கோரி 53 மனுக்களும், நிலஅபகரிப்பு தொடர்பாக 64 மனுக்களும் கலைஞர் உரிமைத்தொகை வேண்டி 11 மனுக்களும் தொழிற்கடன் வழங்க கோரி 54 மனுக்களும் கலைஞர் கனவு இல்லம் வேண்டி 18, மொத்தம் 484 மனுக்கள் பெறப்பட்டன.
இம்மனுக்களை மாவட்ட கலெக்டர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விபரத்தை மனுதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தார். மாவட்ட கலெக்டர் தொடர்ந்து, சிப்பம் கட்டும் அறை, காய்கறி விதைகள், செண்டுமல்லி விதைகள், மாடித்தோட்டம் தொகுப்பு. தென்னங்கன்றுகள், மாங்கன்றுகள், நடமாடும் காய்கறி வண்டி,மா அறுவடைக் கருவி என ரூ.2 லட்சத்து 81 ஆயிரத்து 20 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 10 பயனாளிகளுக்கு மாவட்ட கலெக்டர் வழங்கினார். பின்னர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் பார்வை குறைபாடுடைய பள்ளி மாணவருக்கு ரூ.10000 மதிப்புள்ள நுண்பார்வை நவீன கருவியினையும் வழங்கினார்.