Monday, July 1, 2024
Home » குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை3 ஆண்டு காலமாக என்டிசி ஆலைகள் முடக்கம்கோவைக்கு வரும் ஒன்றிய அமைச்சர்களுக்கு கருப்புக்கொடி

குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை
3 ஆண்டு காலமாக என்டிசி ஆலைகள் முடக்கம்
கோவைக்கு வரும் ஒன்றிய அமைச்சர்களுக்கு கருப்புக்கொடி

by Karthik Yash

கோவை, ஏப். 13: மூன்று ஆண்டுகளாக என்டிசி ஆலைகளை முடக்கி வைத்துள்ளதால், கோவை வரும் ஒன்றிய அமைச்சர்களுக்கு கருப்புக்கொடி காட்டப்படும் என தொழிற்சங்க கூட்டுக்குழு அறிவித்துள்ளது. தமிழ்நாடு என்டிசி ஆலை ெதாழிற்சங்கங்களின் கூட்டுக்குழுவான ‘சேவ் என்.டி.சி.’ அமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு கூட்டம் கோவை சிஐடியு மில் தொழிலாளர் சங்க வளாகத்தில் நேற்று நடந்தது. ஏஐடியுசி பஞ்சாலை தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.

இதில், கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு: நாடு முழுவதும் 23 என்.டி.சி பஞ்சாலைகள் இயங்கிவருகின்றன. இதில், தமிழ்நாட்டில், குறிப்பாக கோவை மாவட்டத்தில் முருகன் மில்ஸ், சி.எஸ். அண்ட் டிபிள்யூ மில்ஸ், ஸ்ரீரங்கவிலாஸ் மில்ஸ், பங்கஜா மில்ஸ், கம்போடியா மில்ஸ், சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் காளீஸ்வரா ‘பி’ மில்ஸ், ராமநாதபுரம் மாவட்டம் பயோனியர் ஸ்பின்னிங் மில்ஸ் ஆகியவை இயங்கி வருகின்றன.
இந்நிலையில், எவ்வித சட்ட நியதிகளின்படியும் அல்லாமல், கடந்த 18.5.2020 முதல் 3 ஆண்டு காலமாக என்டிசி ஆலைகள் முடக்கிவைக்கப்பட்டுள்ளன. இதனால், தொழிலாளர்கள் சொல்லமுடியாத அளவுக்கு துயரத்தில் தவிக்கிறார்கள். இவர்களது அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு, ஆரம்பத்தில் பாதி சம்பளம் கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த 6 மாத காலமாக அதுவும் கொடுக்கப்படவில்லை. கடந்த 3 ஆண்டு காலத்தில் பணி ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு பணிக்கொடை வழங்கப்படவில்லை. கடந்த 3 ஆண்டுகளாக வழங்கப்பட வேண்டிய தீபாவளி போனஸ் வழங்கப்படவில்லை.

இதுதொடர்பாக தொழிற்சங்க பிரதிநிதிகள் டெல்லி சென்று, ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சரிடம் நேரில் முறையிட்டும் பலன் இல்லை. இதுவரை, என்டிசி ஆலைகள்திறக்கப்படவில்லை. எனவே, ஒன்றிய அரசின் அமைச்சர்கள் யார் கோவைக்கு வந்தாலும் அவர்களுக்கு என்டிசி தொழிலாளர்கள் சார்பில் கருப்புக்கொடி காட்டப்படும். வரும் 20ம் தேதி (வியாழன்), தமிழ்நாட்டில் உள்ள 7 பஞ்சாலைகளின் முன்பு கஞ்சித்தொட்டி திறக்கும் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், டி.எஸ்.ராஜாமணி, பி.டி.மோகன்ராஜ், கே.மோகன்ராஜ், வி.கே.தங்கராஜ் (எச்எம்எஸ்), எம்.கோபால், ஆர்.தேவராஜ் (ஏடிபி), சி.பத்மநாபன், பி.ராஜேந்திரன், எம்.ஆனந்தகுமார் (சிஐடியு), வி.ஆர்.பாலசுந்தரம், டி.வெங்கிடுசாமி (ஐஎன்டியுசி), சி.சிவசாமி (ஏஐடியுசி), மு.தியாகராஜன், ஏ.பழனிசாமி (எம்எல்எப்), எம்.நீலமேகம் (டாக்டர் அம்பேத்கர் யூனியன்), என்.கிருஷ்ணகுமார் (என்டிஎல்எப்) உள்பட பலர் கலந்துகொண்டனர்.

You may also like

Leave a Comment

three + three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi