தரங்கம்பாடி, ஜூன் 7: மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு குறுவை சிறப்பு தொகுப்பை உடனடியாக வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் குறுவை சாகுபடியின் போது விவசாயிகளின் நலன் கருதி தமிழக அரசு குறுவை சிறப்பு தொகுப்பு என்ற பெயரில் இலவசமாக உரங்களை அளித்து வருகிறது.
இப்பொழுது தரங்கம்பாடி பகுதியில் பம்ப்செட் மூலம் விவசாயிகள் குறுவை சாகுபடியில் ஈடுபட்டு நடவு பணி நிறைவு பெறும் நிலையில் உள்ளது. அரசு விவசாயிகளுக்கு அளித்து வரும் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை காலதாமதமின்றி விவசாயிகளுக்கு வழங்கினால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக அமையும். தமிழக முதலமைச்சர் இதில் கவனம் செலுத்தி விரைவாக குறுவை சிறப்பு தொகுப்பை விவசாயிகளுக்கு அளிக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.