Friday, July 5, 2024
Home » குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் ஜூன் 12ம் தேதிக்கு முன்னதாக நாளை மறுதினம் தண்ணீர் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் ஜூன் 12ம் தேதிக்கு முன்னதாக நாளை மறுதினம் தண்ணீர் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

by kannappan

சென்னை: காவிரி டெல்டா விவசாயிகளின் நலன் கருதி, குறுவை சாகுபடிக்காக மேட்டூர்  அணையில் இருந்து வழக்கமாக நீர் திறக்கப்படும் ஜூன் 12க்கு முன்பாகவே, நாளை மறுதினம் (24ம் தேதி) முதல் திறந்துவிட முதல்வர் மு.க.ஸ்டாலின்  உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலினால் மேட்டூர் அணையில் இருந்து சென்ற ஆண்டு குறித்த நாளான ஜூன் 12ம் தேதி குறுவை சாகுபடிக்காக நீர் திறந்து விடப்பட்டு, குறுவை நெல் சாகுபடியில் புதிய சாதனை படைக்கப்பட்டது. தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதியில் நல்ல மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு அதிக நீர்வரத்து உள்ளது. இன்றைய (நேற்று) நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்ட அளவு 115.35 அடியாகவும் நீர் இருப்பு 86.25 டிஎம்சி அடியாகவும் உள்ளது. அதிக நீர்வரத்து தொடர்வதால் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை விரைவில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, காவிரி டெல்டா விவசாயிகளின் நலன் கருதி, குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து வழக்கமாக நீர் திறக்கப்படும் நாளான ஜூன் 12க்கு முன்பாகவே, 24.5.2022 (நாளை மறுதினம்) முதல் நீரை திறந்துவிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நமது நாடு சுதந்திரம் அடைந்தது முதல், குறுவை சாகுபடிக்காக நீர் திறந்து விடப்படும் நாளாகிய ஜூன் 12ம் தேதி அல்லது அதற்கு முன்பாக, தொடர்ந்து மூன்று ஆண்டுகள் நீர் திறந்து விடப்படுவது இது இரண்டாவது முறையாகும். இது மட்டுமின்றி, மே மாதத்தில் இவ்வாறு மிக முன்னதாக பாசனத்திற்கு நீர் திறந்துவிடப்படுவது இதுவே முதல்முறையாகும். இதனால், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் கடலூர் ஆகிய காவிரி டெல்டா பகுதி மாவட்டங்களில் குறுவை சாகுபடியில்4 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும். மேலும், நடப்பாண்டில் டெல்டா மாவட்டங்களில் கால்வாய்களை தூர்வாரும் பணிகள் அனைத்தும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு, 23.4.2022 முதல் துவங்கப்பட்டு, ரூ.80 கோடி மதிப்பீட்டில் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகின்றன. ஆறுகளில் தூர்வாரும் பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ள நிலையில், தற்போது வாய்க்கால்கள் மற்றும் வடிகால்களை தூர்வாரும் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. இந்த பணிகள் அனைத்தும் வருகிற 31ம் தேதிக்குள் முடிவடையும். இதனால், மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரானது, முழுமையாக டெல்டா பகுதியின் கடைமடை வரை அனைத்து பகுதிகளுக்கும் சென்று அடைய ஏதுவாகும். இவ்வாறு, மிக முன்னதாக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து விடப்படுவதால், காவிரி டெல்டா விவசாயிகள் அதிக பரப்பளவில் குறுவை சாகுபடியை மேற்கொள்ளவும், சம்பா பயிருக்கான பணிகளை முன்னதாகவே தொடங்கி செயல்படுத்தவும் இயலும். வெள்ளக்காலங்களில் சம்பா பயிர்கள் நீரில் மூழ்காது காக்கவும் இந்த நடவடிக்கை உதவும். இது மட்டுமன்றி, தொடர்ந்து நீண்டகாலத்திற்கு நீர் கிடைக்கப் பெறுவதால் டெல்டா பகுதி முழுவதும் நிலத்தடி நீர் உயர்வதற்கும் இது வழிவகுக்கும். இந்நிலையில், குறுவை சாகுபடி பணிகளுக்கான விவசாய இடுபொருட்களும், வேளாண் கடன்களும் அனைத்து பகுதிகளிலும் விவசாயிகளுக்கு தடையின்றி கிடைத்திட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு அரசு துறைகளுக்கும், மாவட்ட ஆட்சியர்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இந்த ஆண்டும் நெல் உற்பத்தியில் புதிய சாதனை படைத்து வளம் பெருகிட வேண்டும் என்று விவசாயிகளுக்கு முதல்வர் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்….

You may also like

Leave a Comment

13 + nine =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi