திருவாரூர், ஜூன் 5: திருவாரூர் மாவட்டத்தில் அரசின் குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு வரும் அடுத்த மாதம் (ஜுலை) 13ம் தேதி எழுத்து தேர்வு நடைபெறுகிறது. இந்நிலையில் இந்தத் தேர்விற்கு விண்ணப்பித்துள்ளவர்கள் பயனடையும் வகையில் திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கி நடைபெற்று வருகிறது.
எனவே இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, தேர்வுக்கு விண்ணப்பம் செய்த நகல், குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டையின் நகல் ஆகியவற்றுடன் திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகி பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் http://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் காணொளி வழி கற்றல், மின்னணு பாடக்குறிப்புகள், மின்புத்தகங்கள், போட்டித்தேர்வுக்கான பயிற்சிகள், மாதிரி தேர்வு வினாத்தாள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. அதில் வரும் பாடக்குறிப்புகளை தமிழ், ஆங்கிலத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.