கும்மிடிப்பூண்டி சிப்காட் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கை

 

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி சிப்காட் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கை நடக்கிறது. இதுகுறித்து, திருவள்ளூர் கலெக்டர் பிரபு சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் கீழ் திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி, சிப்காட் வளாகத்தில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் துவங்கப்பட்டு கடந்த ஜூலை 1ம் தேதி முதல் நேரடி சேர்க்கை நடந்து வருகிறது.

இங்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்கள் எஸ்சி- எஸ்டி பிரிவில் சர்வேயர், மெஷினிஸ்ட், ரெப்ரிஜிரேட்டர், ஏசி டெக்னீசியன் மற்றும் இன்பிளான்ட் லாஜிஸ்டிக் அசிஸ்டன்ட் போன்ற தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற்று உடனடி வேலைவாய்ப்பு பெறலாம். இங்கு பயிலும் பயிற்சியாளர்களுக்கு ரூ.750 மாதாந்திர உதவித் தொகை, விலையில்லா மிதிவண்டி, சீருடைகள், பாதுகாப்பு காலணிகள், பாடப்புத்தகங்கள், வரைபட உபகரணங்கள், பேருந்து சலுகை வழங்கப்படுகிறது.

மேலும் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மட்டும் மாதந்தோறும் ரூ.1000 மாதாந்திர உதவித்தொகை பயிற்சிக் கட்டணம் முற்றிலும் இலவசம் என பல சலுகைகள் உள்ளன. வயது வரம்பு 14 வயது முதல் 40 வயது வரையும், மகளிருக்கு 14 வயது முதல் உச்ச வயது வரம்பு இல்லை.

எனவே மேற்குறிப்பிட்டுள்ள தொழிற்பிரிவுகளில் உடனடியாக நேரடி சேர்க்கைக்கு அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் க.ராஜலஷ்மி, சிப்காட் வளாகம், கும்மிடிப்பூண்டி – 601 201 என்ற முகவரியில் நேரிலோ அல்லது 8248738413, 8838182450 என்ற கைப்பேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை