குமாரபுரம், ஆக. 3: மணவாளக்குறிச்சி அருகே பாலட்டுக்கரை அம்மாண்டிவிளை பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (38). இவர் செம்பருத்திவிளை பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு பூப்புனித நீராட்டு விழா நிகழ்ச்சிக்காக தனது சொகுசு காரில் குடும்பத்தினரை அழைத்து கொண்டு சென்றுள்ளார். உறவினரின் வீட்டின் அருகாமையில் புத்தனாறு கால்வாயின் அருகே காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கி போகும்போது ஹேண்ட் பிரேக் போடாமல் அப்படியே விட்டு அவசரமாக சென்று விட்டார். இந்நிலையில் கார் மெதுவாக நகர்ந்து கால்வாயின் உள்ளே இறங்கியது. இதனை கண்டவர்கள் கூச்சலிட பிறகு அந்தப் பகுதி உள்ள மக்கள் மற்றும் காரின் உரிமையாளர் சேர்ந்து கால்வாயில் இறங்கிய காரை கயிறு கட்டி மீட்டெடுத்தனர். நிகழ்ச்சிக்கு வந்த அனைவரும் இதனை வியப்புடன் பார்த்தனர்.